பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

105


இளங்கோவடிகளும்,

“விண்ணோ , ரமுதுண்டுஞ்சாவ வொருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்”3

என்றும், “பிறவா யாக்கைப் பெரியோன்”4 என்றும் கூறினார். அதுபோலவே உயிர்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதும் “மன்னுயிர்”5 என்றே சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. மன்னுயிர் என்றால் தோற்றமும் அழிவும் இல்லாத உயிர் என்பது பொருள். சங்க இலக்கியங்கள் மறுபிறப்பை ஒத்துக் கொண்டுள்ளன.

“இம்மைச் செய்தது மறுமைக்காம் எனும்”6 என்ற அடியில் ‘இம்மை’ ‘மறுமை’ என்று குறிக்கப் பெறுவதறிக. ஆதலால் சங்க இலக்கியங்களில் சைவ சித்தாந்தக் கூறுகள் உள்ளன என்பது உறுதியாகிறது. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய மெய்கண்டார் சைவ சித்தாந்தச் சமயத்தை விளக்குவதற்கு அளவை, தருக்க நூல் முறைப்படி சிவஞான போதத்தைச் செய்தருளினார். சிவஞான போதத்திற்குப் பின்பு திருக்களிற்றுப் படியாரும் திருவுந்தியாரும் தோன்றின. சிவஞான போதத்திற்குப் பின் அதன் வழி நூல்களாகப் பதினொரு நூல்கள் தோன்றின. ஆயினும் இவை அனைத்தும் மெய்கண்ட சாத்திரம் என்னும் வரிசையிலேயே வைத்து எண்ணப்படுகின்றன. சைவ சித்தாந்தச் சமயம் அறிவாய்வு கண்டு, வளர்க்கப் பெற்ற சமயம். வழிவழி ஆசிரியன்மார்களால் உபதேசிக்கப் பெற்று வளர்ந்து வந்துள்ள ஒரு சமுதாய நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் நல்வாழ்க்கைக்கும் உரிய சமயமாகவும் விளங்குகிறது. “சித்தாந்தம்” என்கிற சொல்லுக்கு “முடிந்த முடிபு” என்பது பொருள். முடிந்த முடிபு என்று கொள்ளத்தக்கவாறு ஆழமாகவும், அகலமாகவும் பல்வேறு தத்துவங்களையும் இந்திய நாட்டின் பல்வேறு சமயங்களையும் ஆய்வு செய்து அத்தத்துவங்களையும் அச்சமயங்களையும் விட சைவசித்தாந்தச் சமயம்

கு.XII. 8.