பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

117



“அம்மையப்பரே, உலகுக்கு அம்மையப்பர்”20

என்று உலகம் தழுவிய கருத்தை உணர்த்துகிறது. ஆதலால், சைவ சித்தாந்தச் சமயம் மானிட சாதியில் ஏற்படும் நாடு, இன, மொழிப் பிரிவினைகளைக் கடிந்து ஒதுக்குகிறது என்பது உண்மை. ஏன்? கடவுளையும் கூட உலகிற்கு ஒருவனாகவே உணர்த்துகிறது. உலகோர் எந்தப் பெயரில், எந்தக் கோலத்தில், யார் தொழுதாலும் அவர் ஒருவரே என்கிற ஒருமையில், சைவம் நிலைத்து நிற்கிறது. ஆனால், இன்று சித்தாந்தச் சைவத்தைச் சார்ந்திருப்பவர்கள், சித்தாந்தச் சைவத்தை வாழ்வியலாக்கத் தவறிவிட்டார்கள். மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் அறவே மறுத்த, மனித குலத்தை வேற்றுமைப்படுத்தும் புன்மை நெறிகளை, பொய்ம்மைச் சாத்திரங்களின் பெயரால் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். கோடானு கோடி மக்களைத் தீண்டத்தகாதவர்களாக்கிக் கொடிய துன்பத்தை இழைத்து வருகின்றனர். மெய்கண்ட சிவம் வழங்கிய புனித நெறி - அப்பரடிகள் வழங்கிய அருள் நெறி - சேக்கிழார் காட்டிய செந்நெறி வழிவந்த தமிழகம், சராசரி மனிதனுக்குத் திருக்கோயில் வழிபாட்டுரிமையைக் கூட வழங்கவில்லை. நாடு விடுதலை பெற்ற பிறகு சட்டசபையில் இயற்றப்பெற்ற ஆலய நுழைவுச் சட்டம்தான் இந்த உரிமையைத் தந்து, மனித குலத்தின் மீது படிந்திருந்த கறையை நீக்கியது. ஆக, மனித குலத்தை வேற்றுமையற்ற ஒருமையுணர்வுடையதாகக் காண்பதில் சைவ சித்தாந்தச் சமயமும் மார்க்சியமும் ஒரே நிலையின.

வறுமை நீக்கத்திற்கு வழிகாட்டாதது ஏன்?

மானிட சாதியில் அடுத்துள்ள பெரிய வேற்றுமை வளம், வறுமை ஆகும். வறுமையை,