பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

133


செய்வதில் பெரிய தடையாக இல்லை. சித்தாந்தச் சைவ மரபுப்படியான கடவுள் நம்பிக்கையால் உயிர்களின் நிலையான நலனுக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் யாதொரு தடையுமில்லை. சைவசித்தாந்தச் சமயத்தில் உள்ள கடவுள் தத்துவம், உயிர்க்குலத்திற்கு உறுதுணையாய் அமைந்திருக்கிறது. பிரிவினைகள், வேற்றுமைகள், ஏற்றத் தாழ்வுகள் முதலிய சமுதாயத் தீமைகளுக்குச் சித்தாந்தச் சமயம் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ முற்றாக, உடன்படவில்லை. ஆதலால், மானிட சமுதாயத்தை மேம்பாடடையச் செய்யச் சித்தாந்தச் செந்நெறியின் தத்துவங்களுக்குச் செயலுருவம் கொடுத்தாலே போதும். புதுமையும் பொதுமையும் நிறைந்த சமுதாயத்தைக் காணலாம்.

சைவ சித்தாந்தம் புதுமைத் தன்மையுடையது. முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியதாய் என்று மாணிக்கவாசகர் போற்றிய உரை, இன்றும் என்றும் சைவ சித்தாந்தச் செந்நெறிக்கும் பொருந்தும். இன்று வேண்டியதெல்லாம் செயற்பாடேயாம்.

அடிக்குறிப்புகள்

1. தமிழ் இந்தியா. ந.சி.க, பக்கம் 207

2. புறநானூறு—19

3. சிலப்பதிகாரம்—வேட்டுவவரி-23

4. சிலப்பதிகாரம்-இந்திர விழவூரெடுத்த காதை—வரி 169

5. புறநானூறு, 20 : 21

அகநானூறு 31 : 4

கலித்தொகை 34 : 1

குறுந்தொகை 376 : 1

பதிற்றுப்பத்து 15 : 35