பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பணி! மனிதகுல ஒருமைப்பாட்டைக் காண்பதே இந்த நூற்றாண்டின் பெருமைக்குரிய பணி! எனவே, கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்த்து, அமைதியும் சமாதானமும் உடைய பொது உலகைப் படைப்போமாக!

இளமை நலம் போற்றுதல் என்பது பொதுவாக மாந்தர்க்கு இயல்பான குணம். சிலருக்கு வயதைக் கேட்டாலே சினம் பிறக்கும். உடலில் தலையில் வயதாகி விட்டதற்குரிய அடையாளங்கள் தென்பட்டாலும் வயதாகி விட்டது என்று யாராவது கூறினாலும் அவர்களுக்குப் பொல்லாத கோபம் வருகிறது. இதனால், என்ன புரிகிறது! இளமையைப் போற்ற அனைவரும் விரும்புகின்றனர் என்பதே! ஆனால் இளமையென்பது உடலில் மட்டும் இருந்தால் போதாது. சிலர் ஆண்டில் இளையோராக இருக்கின்றனர். ஆனால், உணர்விலும் ஊக்கத்திலும் படுகிழமாகிச் செயலற்று ஏங்கித் திரிகின்றனர். இஃதெப்படி இளமையாகும்? உடலில் இளமை; உணர்வில் இளமை ஊக்கத்தில் இளமை காட்ட வேண்டும். இளமையைப் போற்றுதல் வாழ்க்கைக்குச் சிறப்பைத் தரும். அதனாலன்றோ, இளமையையும் அழகையும் போற்றும் வகையில் நம் ஆன்றோர்கள் உடற்பயிற்சி முறைகளைக் கண்டார்கள். உடற்குப் போதிய பயிற்சி கொடுத்து எஃகு போலாக்கி இளமை நலம் பேணுக! துன்பங்களை வாழ்க்கையைக் கடக்கும் படிகளாக நினைத்து, எய்த்துக் களைத்துப் போகாமல், வெற்றியில் நம்பிக்கை வைத்து, உணர்வில் இளமை காத்து, வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்க! இன்றைய தோல்வி நாளைய வெற்றிக்கு அடிக்கல் என்ற நம்பிக்கையுடன், இளமை நலமிக்க ஊக்கத்துடன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருமின்! நில்லன்மின் !

வளமான வாழ்க்கைக்குத் துணிவு தேவை. உடற்சார்பு மிகுதியாக உடையவர்கள் எளிதில் துணிவு கொள்ள மாட்டார்கள்; சலனப்படுவார்கள். உயிர்ச்