பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

163


நன்றாக அறிந்தவர்கள்-பழகியவர்கள் நஞ்சையே தந்தாலும் வெறுப்புக் காட்டாது, அந்த நஞ்சினை மலர்ந்த முகத்துடன் வாங்கி அருந்துபவர்கள் வாழ்வர். அங்ஙனம் வாழ்பவர்களே வாழ்பவர்கள். தமக்குத் தீமை செய்வார் மாட்டும் கண்ணோட்டமுடைய வராயிருத்தல் சாவை வெல்லும் மருந்து, அங்ஙனம் வாழ்தலே வரலாற்று ஏடுகளால் புகழத் தக்க நாகரிகம்.

“பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்,”

என்றார் திருவள்ளுவர்.

கண்ணோட்டத்தை இரக்கம் என்றும் கூறலாம். இரக்கம், நீதி இவற்றைச் சார்ந்த வாழ்க்கையில் அறநெறி அனைத்தும் வந்து அமையும். கண்ணோட்டம் செய்வதற்குப் பெரிய மனம் வேண்டும். பெரிய மனம் மிகச் சிறந்த அணிகலனாகும். தண்டிப்பதற்கு வேண்டிய ஆற்றலை விட, கண்ணோட்டம் செய்வதற்கு மிகுந்த ஆற்றல் வேண்டும். இந்த உலகம் கண்ணோட்டத்தால் இயங்குகிறது. ஆதலால், வளமான வாழ்க்கை அமைய, கண்ணோட்டத்தைக் கைக்கொள்ளுவோமாக!

அடுத்து, வளமான வாழ்க்கைக்கு இன்றியமையாத உயர் பண்பு வாய்மையாகும். வாய்மை என்ற சொல்லுக்கு உரிய ஒழுக்கமாகத் தமிழ் வழக்குக் கற்பிப்பது, அயல் வழக்கிலிருந்து மாறுபட்டது. உள்ளதை உள்ளவாறே சொல்லுதல் என்பது அயல் வழக்கு. தமிழ் வழக்கோ எனின்,

“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்”

என்பதாகும். இஃது உண்மை, வாய்மை, மெய்ம்மை என்றும் சொல்லப் பெறுதல் உண்டு. இவை முறையே உள்ளம், வாய், உடம்பு ஆகியவற்றோடு தொடர்புடையனவாகச் சொல்லப்