பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெறும். ஒருவர் அகத்தூய்மை உடையார் என்பதை அவருடைய வாய்மை நிறைந்த ஒழுக்கத்தினாலேயே அறிந்து கொள்ள முடியும், வாய்மை, அகநிலை ஆக்கத்திற்கும் உகந்தது; சமுதாயம் தழுவிய புறத்திண்ண வாழ்க்கைக்கும் அரண் செய்ய வல்லது. அதனால், வாய்மையைவிட வேறொன்றும் உயர்ந்ததில்லை என்று, உயர்ந்த மொழியில் வள்ளுவம் உரைக்கிறது.

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற”

என்பது திருவள்ளுவம். வடநூல் வழக்கு, வாய்மையை - உண்மையைச் சத்தியம் என்று கூறும். இன்று கடவுளை - மதத்தை மறுப்பது நாத்திகம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஆர்தர் விஞ்ச் என்ற அறிஞன், “உண்மையை மறுத்தல் ஒன்றே நாத்திகம்” என்று கூறுகிறான். எக்காலத்திற்கும் எவ்விடத்திற்கும் உண்மை பொதுவானது; பொருந்துவது. வாய்மை நெறி போற்றி ஒழுகியவர்களின் புகழ், என்றும் நின்று விளங்கும். உலகில் பெற்ற எல்லாவற்றையும் இழந்து விட்டாலும் கூட, நம்மிடத்தில் வாய்மை ஒன்று மட்டும் இருந்தால் போதும்-அதைக்கொண்டு வாழத் தொடங்கலாம்; சாதனைகள் செய்யலாம். வாய்மையென்பது சொல் மட்டுமன்று, வாய்மையே வாழ்வாக மாறவேண்டும். வாய்மையும் அன்பும் வலிமை சான்ற கருவிகள் அல்லது பண்புகள். இவ்விரண்டும் ஒருங்கே அமைந்து விடுமானால் வாழ்க்கையில் வெற்றி உறுதி; வளம் உறுதி.

உண்மை பேசுவது என்பது கூர்ந்து ஆய்வு செய்தால் மிக எளிதான காரியம். பொய் பேசுவதற்கு வேண்டிய திறமை உண்மைக்கு அவசியமில்லை. ஓர் உண்மை அதனளவிலேயே விளங்கும். ஆனால், ஒரு பொய்யோ அடுக்கடுக்காக எட்டுப் பொய்கள் சொன்னாலும் விளங்கவும் செய்யாது; நம்பிக்கையும் தராது. எல்லாவற்றையும் விட உண்மை