பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மத மாற்றம்

அண்மைக் காலமாக நமது நாட்டில் மதம்மாறுதல் என்ற ஒரு புதிய சமுதாயச் சிக்கல் தோன்றியிருக்கிறது. இது காலத்துக்குக் காலம் மெல்ல நடைபெற்றுக்கொண்டு வந்திருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஏற்படும் மனத் தாங்கல்கள், புழுக்கங்கள் அவை தொடர்பான சண்டைகள் இவைகளை மையமாகக் கொண்டு வாய்ப்புழி பலரை ஒரு சேர மதம் மாற்றுதல் என்பது இப்பொழுதுதான் நடைபெற்று வருகிறது. மத அனுபவ அடிப்படையிலும் கூட இது வரவேற்கத்தக்கதல்ல, மதங்கள் வேறுபடுவதற்குக் காரணம் பல்வேறு அனுபவங்களின் வழியில் தானே தவிர வேற்றுமைகளின் பாற்பட்டதல்ல. மதம் என்பது, ஒருவர் உயிரால் அனுபவித்துத் தன்னுடைய ஆன்மிகத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்குத் துணை செய்கின்ற ஒன்று. அந்த அனுபவத்தின் வழியில் ஒவ்வொருவரும் தன் மதத்தை மாற்றிக்கொள்வதற்கு உரிமை இருக்கவேண்டும். அதில் ஒன்று தடையில்லை. ஆனால், இப்பொழுது நிகழ்கிற மதம்மாறுதல் என்பது அத்தகைய நிகழ்ச்சி அன்று.

இதற்கு ஏதோ ஒர் உந்து சக்தி அல்லது காரணம் இருக்கிறது என்று கருதும் பொழுதுதான் நாட்டுப்பற்றுக்கும் சமுதாயப் பற்றுக்கும் எல்லாவற்றிற்கும் மேலாகப் பல ஆண்டுகளாக நாம் காப்பாற்றி வந்திருக்கிற பரஸ்பர சகிப்புத் தன்மை மதச்சார்பற்ற வெறித்தன்மையின்மை ஆகிய உயர் பண்புகளுக்கும் இடையூறு நிகழுமோ என்று கருதிக் கவலைப்பட வேண்டியதாயிருக்கிறது. இந்தக் கவலைக்குச் சரியான தீர்வு காண்பது நம்முடைய நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

பொதுவாக, மதம் மாறுதலுக்கு அதிகமாகச் சொல்லப்படுகிற ஒரு காரணம், சமூகத்திலிருக்கிற தீண்டாமையினால்