பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

சிந்திக்கப்படுகிறது. “நான் யார்? நான் என்பது அஞ்சலக முகவரி அன்று. நான் என்பது வாழ்க்கை வசதிகளும் பதவி அடையாளங்களும் அன்று. நான் என்பது நாமாக மாறவேண்டும். அறியாமை களைந்து பேரறிவிடம் தம்மை இணைத்துக் கொள்வது வழிபாட்டின் பயனாகும். வழிபாடு இறைவனுக்காகவா? உலக உயிர்க்குலம் தம்மைப் போற்றித் துதிக்க வேண்டும் என்று இறைவன் எதிர்பார்க்கின்றாரா? வழிபாட்டின் பயன் உயிர்க்குலம் தம்மை ஈடேற்றிக் கொள்ளவே” என்ற கருத்து மிகவும் ஏற்புடையதாகும்.

“ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்னும் சிலப்பதிகார நெறி ஏற்புடையதே. ஊழ்வினை என்பது செய்த வினைகளின் பயன்தானே நெல்லை விதைத்தால் நெல்லைத்தான் அறுக்க முடியும். எதை விதைக்கின்றோமோ அதைத்தான் அறுவடை செய்கின்றோம். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்கிறது புறநானூறு. அதேபொழுது ஊழ்வினையை மாற்ற முடியாது என்ற கருத்தினை மறுத்து மகாசந்நிதானம் தெளிவுபடுத்துகின்றார்கள். “ஊழ் மாற்ற முடியாதது என்கின்றனர். கீழே விழுந்தவன் எழுந்திருக்க முடியாதா? எழுந்திருக்கக் கூடாதா? இது என்ன அநியாயம்? கீழே விழுந்தவன் எழுந்திருக்க முடியும்: எழுந்திருக்க வேண்டும். இதுதான் வாழ்க்கையின் குறிக்கோள்’ என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றார்கள்.

இடுகாட்டில் எரியும் பிணங்கள்!
நடுவீட்டில் நடை பிணங்கள்!

அன்பில்லாத வாழ்க்கை வீட்டுக்குள் மயான அமைதியை வரவழைக்கும் அல்லது போர்க்களத்தை உருவாக்கும் இன்று பகுத்தறிவுச் செயற்பாடே இல்லை! தொகுப்பறிவுதான் இருக்கிறது. வேண்டும் என்று பழகும் காலத்தில் தமக்குச் சாதகமான நன்மைகளையே தொகுத்துப் பார்க்கிறார்கள். வெறுப்பு வந்தவுடன் நன்மைகளை எல்லாம் மறந்து விட்டு தீமைகளையே - தவறுகளையே தொகுத்துப் பழி சுமத்துகிறார்கள். இன்று சமயங்கள் நிறுவனங்களாக மாறிய பிறகு, சமய நெறியிலிருந்து நெடுந்தொலைவு விலகிச் சென்ற பிறகு தம் தகுதியை இழந்துவிட்டன. அதனால் சமய அடிப்படையில் போர்கள் கூட நடந்தன; நடந்து கொண்டிருக்கின்றன.” என்ற கருத்து இன்றும் நடைமுறை உண்மையாகச் சமூகத்தின் போக்கில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.