பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உயரிய இயல்புகளில் குறைபாடுடைய உயிர்கள், கடவுள் தன்மைகளை, நிறைநலம் பயக்கும் தன்மைகளை அடைய முயற்சி செய்தலே வாழ்க்கையின் குறிக்கோள்! நோக்கம்! இந்த உயரிய குறிக்கோளை அடைவதற்குச் சமயம் துணை செய்யும் ! தனிமனிதனைச் சமயம் வளர்த்து, சமுதாய வாழ்வுடையவனாக்கி, அன்பினாற்றலும், அருளொழுக்கமும் உடையோனாக மாற்றுகிறது. இதற்குத் துணை செய்வதே வழிபாடு, கடவுள் வழிபாடு என்பது வெறும் சடங்கன்று. வழிபாடு என்பது உயிர்ப்புள்ள ஒரு முயற்சி! அறிவார்ந்த ஆள்வினை! எண்ணுதல், நினைத்தல் ஆகிய அகநிலைப் பயிற்சிகள் மூலம், ஆன்மா தன்னை உயர்த்திக் கொள்வதற்குத் துணை செய்வது வழிபாடு! வழிபாடு கடவுளை முன்னிறுத்திச் செய்யப்படுவது உண்மை. ஆனால், வழிபாட்டின் பயன் கடவுளுக்கன்று. வழிபாட்டின் பயன் முழுதும் மனிதத்துக்கேயாம்.

திருவுருவ வழிபாடு

கடவுள் ஒரு பொருள்; அஃதோர் ஆற்றல்; வரம்பில் ஆற்றல்! கடவுள் ஓர் அறிவுப் பொருள்; வாலறிவுப் பொருள்! கடவுள் ஓர் இன்பம்; எல்லை கடந்த இன்பம்! கடவுள் ஓர் அறம், அறங்களுக் கெல்லாம் சிறந்த அறம்! கடவுள் ஒரு நிதி; நிலவும் நீதிக்களுக்கெல்லாம் தலையாய நீதி. இங்ஙனம் உயர்வற உயர்ந்துள்ள கடவுட் பொருளோடு, உயிர் ஓர் உயிர்ப்புள்ள உறவைக் கொள்ளும்போது உய்தி பெறுகிறது; உயர்கிறது; அதன் குறிக்கோளும் கைகூடுகிறது. இந்த உறவு எளிதில் கைகூடுவதன்று. கடவுளைச் சிந்திக்க வேண்டும்! கடவுள் உருவமில்லாதவர். ஆனால் எல்லையற்ற ஆற்றலும் நிகரற்ற அருளும் இருக்குமாயின் எந்த ஒரு பொருளும் அது விரும்பும் உருவத்தைப்பெற இயலும். ஆயினும் கடவுளுக்கு உருவம் தேவையில்லை. மானிடரில்கூட வளர்ந்த சிலர், ஞானத்தாலேயே இறைவனைத் தொழுவர். அவர்களுக்கும்