பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

317



நம்முடைய நல்லூழின்மையின் காரணமாக இந்து சமூகத்தில் இயற்கையான இன, மொழி வேறுபாடுகள் மட்டுமல்லாமல் செயற்கையான சாதி வேற்றுமைகள் வளர்ந்துள்ளன. இந்தச் சாதி வேற்றுமைகள் தொடக்க காலத்தில் தொழில் வழிதான் அமைந்தன. ஆனால் காலப்போக்கில் இந்தச் சாதி வேற்றுமைகள் பிறப்பின் வழியதாக அமைந்துவிட்டன. தொழிலியல் அடிப்படையில் அமையும் வேறுபாடுகள் மாறுபாடுகளை முரண்பாடுகளை உண்டாக்காது; மிகப் பெரிய உயர்வு தாழ்வுகளையும் தோற்றுவிக்காது. தொழிலியற் பகுப்பு முறையில் பெருமைகள், மேற்கொள்ளப்படும் தொழிலின் அடிப்படையிலேயே அமையும்; பிறப்பில் அமையாது.

ஆனால் நடைமுறையில் இந்து சமூகத்தில் சாதிகள் பிறப்பின் அடிப்படையிலேயே அமைந்து செயற்படுகிறது. இரண்டு சாதியினர்க்கிடையில் மலைக்கும் மடுவுக்கு மிடையேயுள்ள மாறுபாடுகள் ஏன்? முற்றிய நஞ்சாகத் தீண்டாமையே உருப்பெற்று விட்டதே! இங்ஙனம் பிறப்பின் அடிப்படையில் சாதி வேறுபாடுகள் வளரத் தொடங்கியவுடன் இந்து சமூகத்தினரிடையில் வெறுப்பும் பகையும் ஆரோக்கியமில்லாத போட்டா போட்டிகளும் வளரத் தொடங்கிவிட்டன. காலப்போக்கில் பழக்கத்தின் காரணமாகக் குடும்பங்களிடையே கூட, இந்த நிலைமைகள் பரவிக் கால் கொண்டன. இந்த வேற்றுமைகளின் காரணமாகவே இந்து சமூகத்தினிடத்தில் பரஸ்பர நம்பிக்கை குறைந்துநல்லெண்ணங்கள் குறைந்து அவநம்பிக்கை மேலிட்டு எரிச்சலூட்டும் பிரச்சாரங்களும், பகை மூட்டும் இயக்கங்களும் தோன்றலாயின. இவற்றின் விளைவாகக் கோடானு கோடி மக்கள் மதமாற்றத்திற்கு ஆளாயினர். நம்முடைய இந்து சமூக வரலாற்றில் நிகழ்ந்த இந்தத் தீய விளைவுகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறுதல் கூடாது.