பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று அப்பரடிகள் கூறுமாறு போலவும், இறைவன் இன்ன இடத்தன், இன்ன ஊரினன் என்று எடுத்தியம்ப இயலாது. அவ்வாறு எங்கணும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனுக்குத் திருக்கோயில் ஏன்? திருக்கோயில் கடவுள் எழுந்தருளியுள்ள இடம்! ஆனால், கடவுளுக்காகத் திருக்கோயில்கள் அல்ல! பொதுவாக, உயிர்க்குல ஈட்டம், சிறப்பாக மானிடகுல ஈட்டம் இறைவனைக்காண, அவனுடன் கலந்து உறவாட, இறை நலன்களைப் பெறத் துணையாய் அமைவது திருக்கோயில். அடுத்து, வாழப் பிறந்த மனித இனம் ஒன்றுபடவும், ஒப்புரவு நலன்கள் பெற்றுச் சிறந்து வாழ்ந்திடவும் திருக்கோயில் துணையாய் அமைவது. திருக்கோயிலை மையமாகக் கொண்டு இறைமைத் தத்துவம் மேலாண்மை செய்தது! இறைமைத் தத்துவத்தின் வழி நின்று மக்கள் சமுதாயத்தை ஒருங்கிணைக்க - சமுதாய மேம்பாட்டிற்குரிய நெறிமுறைகளைக் காண - சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு உருவம் கொடுக்கத் திருக்கோயில்களை மையமாகக் கொண்டு இயங்கினர்; செயல்பட்டனர். ஏன்? அப்பாலுக்கு அப்பாலாக விளங்கிய கடவுளையே சமுதாய உறுப்பாகக் கொண்டு வந்து செயல்படுத்தினர்; ஏவல் கொண்டனர் இஃதொரு அருமையான தத்துவம்!

“அப்பன் நீ அம்மைநீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓருரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன்நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறுரர்ந்த செல்வன் நீயே”

என்ற பாடல் இறைவனை உற்ற அன்புடைய உறவாகவும் சுற்றமாகவும் கொண்டு போற்றும் பண்பு நோக்கத்தக்கது.