பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தமிழர் தம் அறிவில் பூத்துத் தோன்றியதே சைவ சித்தாந்தச் செந்நெறி. உலகச் சமயங்கள் உயர்வுடையன. ஆயினும் தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுகிறவர்கள் சைவசித்தாந்தமே உலகச் சமய நெறிகளில் உயர்வுடையதாக இருப்பதை அறிவர். எந்த ஒரு காரணத்தினாலாவது உலகம் இதை அறிந்துகொள்ள மறுத்தால், அறிந்தும் எற்றுக் கொள்ள மறுத்தால் அது உலகத்திற்கு இழப்பேயாகும்.

ஆனால் தமிழகத்திலேயே கூட சித்தாந்தச் செந்நெறி தனித் தன்மையை இழந்து கலப்படமாகி உருவம் இழந்திருக்கிறது.

எந்த நோக்கங்களுக்காக நம்முடைய பணிகள் தொடங்கப் பெற்றனவோ அந்த பணிகளில் நாம் இன்னும் முழுமையான வெற்றியை அடையவில்லை. தேக்கத்தில் இயக்க உணர்வை உண்டாக்க முடிந்தது; அவ்வளவுதான். தமிழகம் எதையும் எளிதில் ஏற்றுச் செயற்படுத்தாமல் வாளாயிருந்ததால் எல்லைகளை இழந்திருக்கிறது. இனவழி மக்களை இழந்திருக்கிறது. இது ஆண்டாண்டுக் காலமாக வளர்ந்து வந்திருக்கிற நோய், வள்ளுவரை ஈன்றெடுத்த நாடு, திருநாவுக்கரசரை ஈன்று புகழ்பெற்ற நாடு, வள்ளலாரைப் பெற்ற நாடு எவ்வளவு இழப்புகளை அடைந்திருக்கிறது? அந்த இழப்புகள் இன்னும் தொடர்கின்றன.

நாம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தோல்விகளைச் சந்திக்கிறோம்; இகழ்ச்சிகளை ஏற்றுக் கொள்ள என்றும் தயங்கியதில்லை. ஆனால், இனம், மொழி, நமது சமயம் ஆகியவற்றுக்கு இழப்புகள் ஏற்படும் பொழுது உயிர் துடிக்கிறது. நமக்குப்பின் வருபவர்கள், நம்மைச் சேர்ந்தவர்கள் இந்த உயிர்த் துடிப்பைப் புரிந்துகொண்டு செயற்பட்டால் அதுவே நமக்கு மகிழ்ச்சி.

அன்புகூர்ந்து சாதனைகளைச் செய்யத் துணியுங்கள். நம்முடைய இயக்கத்திற்கு-கொள்கைக்கு மேட்டுக் குடியினர்