பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறச்சாலை”யிலும் மருத்துவ நூல் படிப்பவர்களுக்கும் இலக்கணம் படிப்பவர்களுக்கும் உணவு அளிக்கப் பெற்றது என்றும், அக்கல்வெட்டுக் கூறுகிறது. காஞ்சீபுரம் பக்கத்தில் உள்ள திருமுக்கூடல் கல்வெட்டு, கி.பி. 1067இல் திருக்கோயில் வருமானத்திலிருந்து வீரசோழன் என்ற பெயரால் மருத்துவ சாலையும் மருத்துவம் கற்பிக்கும் கலாசாலையும் நிர்வகிக்கப் பெற்றன. அவற்றில் ஓராண்டுக்குத் தேவையான மருந்து வகைகள் இருந்தன. ஒரு மருத்துவனும் சல்லியக் கிரியை - அறுவை மருத்துவம் பண்ணுவானும் அங்கு இருந்தனர். நோயாளிகட்குத் துணையாக மருத்துவப் பணி மகளிர் - தாதியர் பலர் இருந்தனர்; மருத்துவருக்குப் பெயர் “கோதண்டராமன் அஸ்வத்தாமப்பட்டன்” என்று பல்வேறு செய்திகளைக் குறிப்பிடுகிறது.

மேலும் தஞ்சையில் குந்தவைப் பிராட்டியாரால் அவர் தந்தை முதலாம் இராசராசன் நினைவாக, இலவச மருத்துவச்சாலை நிறுவப் பெற்றதாக அறிகிறோம். திருவிசலூர், திருப்புகலூர், திருச்சி மாவட்டம் கோவந்த புத்துார், குன்றத்துர், மைசூரைச் சார்ந்த சுகடுர் முதலிய இடங்களில் எல்லாம் திருக்கோயில்கள் மருத்துவச் சாலைகள் அமைத்து மக்கட் பணி புரிந்தமையைத் தெள்ளத் தெளிய அறியலாம்.

ஊராட்சி மன்றம்

பழங்காலத் தமிழராட்சி முறை இன்றைய ஆட்சி முறையைப் போல அதிகாரம் ஓரிடத்தில் மையப்படுத்தப் பட்ட ஆட்சி முறையன்று. அதிகாரங்கள் முறைப்படுத்தப் பெற்றுப் பரவலாக்கப் பெற்றிருந்த ஊராட்சி மன்றங்களே ஊராட்சியின் மேலாண்மைக்குப் பொறுப்பேற்றிருந்தன. அரசு, மக்களைச் சலுகைகளால் வளர்க்கவில்லை, உரிமைகளால் வளர்த்தது. திருக்கோயில்களில் ஊராட்சி மன்றங்கள் அமைந்திருந்தன. அவை, ஊராட்சியின் மேலாண்மைக்குரிய பணிகளைத் திறம்படச் செய்தன. நீர்நிலைகளை ஆழப்