பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருமுறைகளை மறைத்துப் பூட்டினர். சிதம்பரத்தில் மறைந்திருந்த திருமுறைகள் ஆண்டவனின் விண்னொலியாற் பெறப்பட்டன. அவற்றை நம்பியாண்டார் நம்பி தெரிந்து தமிழுலகுக்கு அளித்தார். அத்திருமுறைகள் மறைக்கப்பட்டதோடு மறைந்தொழிந்திருந்தால் இப்பொழுதிருக்கும் நமது நிலை என்னவாக இருக்கும்? தத்துவப் பெருக்கால் தம்மை உயர்ந்தவர்களாக எண்ணி இறும்பூதடையும் சிலர் தம்மை எப்படி இழித்துரைப்பார்கள்.

“கல்லைப் பிசைந்து மென் கனியாக்கி” என்பதுபோல - நம் நெஞ்சக் கனகல்லை நெகிழ வைக்கத் தாய்மொழி வழிபாடு உதவுகிறது. வழிபாட்டிற்குக் காதல், கனிவு, கசிவு தேவை. சிந்தனை வழியாகவே காதல், கசிவு, கனிவு போன்றவை பிறக்கும். காதலும் கசிவும் உண்டாகிவிட்டால் கோவிலிலே வக்கீல் வைத்து வணங்க வேண்டிய முறை தேவைப்படாது. யான் எனது என்ற செருக்கழித்துச் சமுதாயத்துக்கு நலம் பயக்கத் தெய்வ வணக்கம் பயன்பட வேண்டும். இமயத்திலே, பொதிகையிலே ஊற்றெடுக்கும் தண்ணீர் எங்கும் பரவி விரவி ஓடிப் பயனளிக்கிறது. ஆனால் மனிதனின் இதய மலையிலே ஊற்றெடுக்கும் ‘சிவமயம்’ கோவிலோடும் பூசை முறையோடும் நின்று விடுகிறது. வெளியில் வந்தவுடன் என் மயம் ஆகிறது. எவ்வுயிர்க்கும் ஈசனுக்கும் தமக்கும் அன்புள்ளவர்களாக ஆக்கும் பெற்றி வழிபாட்டுக்கு உண்டு.

எனவே, இனத்தை ஒத்த மொழியிற் பிடிப்பும்பாசமும் இருத்தல் வேண்டும். ஆண்டவனிடத்தில் சொந்த மொழி வழித்தொடர்பே அத்தகைய பலனைத் தருகிறது. இறைவன் பல வழிகளில் தமிழை அனுபவித்துச் சுவைத்திருக்கிறான். காசு கொடுத்தும், தூது நடந்தும் கன்னித் தமிழ் கேட்டதாக வரலாறு பேசுகிறது.

வடமொழியும் செந்தமிழும் வழக்கிழக்க வேண்டியவை யென்றால் வடமொழிக்குக் கொடுக்கப்பட்டது போல நம்