பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்து மொழிகள்

397


அனாதியான ஆன்மா ஆண்டவனிடத்தில் அடிமைப்பட் டிருக்கிறதென்பதைத் தாயுமானவர் அழகுறச் சொல்கின்றார்.

“இரும்புநேர் நெஞ்சகக் கள்வனானாலும் உனை
இடைவிட்டு நின்ற துண்டோ?
என்றுநீ அன்றுநான் உன்னடிமை யல்லவோ
யாதேனும் அறியா வெறுந்’
துரும்பனேன்; என்னினும் கைவிடுதல் நீதியோ”

என்கிறார். நமக்கு வரும் இன்ப துன்பங்களுக்கு அவனே பொறுப்பாளி. இந்த விடை மிகமிக ஆழமான குளத்து நீரில் ஒரு திவலை. கற்கண்டில் ஒரு துண்டு. நானே கடவுள்-நானே பிரமம் என்றால் பொருந்துமா? “குறைவிலா நிறைவே கோதிலா அமுதே’ என்கிறது திருவாசகம். பரிபூரண நிறைக்குப் பெயர் கடவுள். அப்படியானால் அவனின் பிரதி பிம்பமான நாம் ஏன் நிறைவற்றுத் தொல்லைப்படுகிறோம்? இறைவனின் குழந்தைகளாக, இறைவனின் அடியார்களாக நம்மை நாம் எண்ணிக் கொள்ள வேண்டும். நமது சைவநெறி வாழ்வைத் தழுவியது; வாழ்வோடு இணைந்து பிணைந்தது. நிறைவான குடும்ப வாழ்வே சித்தாந்தச் சிவநெறி வாழ்வாகும்.

சேச்கிழார் பெருமான் சிவநெறித் தொண்டர்களைப் பற்றி நிறையச் சொல்லியுள்ளார். பூசலார் நாயனார் மனத்திலே கோவிலெடுத்து மகேசனைக் கண்டார். கோவிலுக்குப் போக வசதியில்லாதவர்கள்-வாய்ப்பில்லாதவர்கள் மானசீகமாக இறைவனை வழிபடலாம். திருக்கேதீஸ்வரம் செல்ல வசதியில்லாவிட்டால் திருக்கேதீஸ்வரப் பதிகம் பாடிப் பாலாவியின் கரைமேல் ஆண்டவனை அகத்திலே காணலாம். நாவுக்கரசர் உழவாரத் தொண்டால் கடவுளைக் கண்டார். திருக்குறிப்புத் தொண்டர் மெய்யடியார்க்குத் துணி துவைத்துக் கொடுத்துப் பரமன்பதம் அடைந்தார். நாமெல்லாம் நாயன்மார்களின் குருபூசைகளைக்