பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சோதியைக் காணமுடியும். தெய்வ உருவங்கள் கற்களிலே செதுக்கப்படுகின்றன. கல்லைக் கலையாக்கிக் கலையில் கடவுளைக் கண்டு வணங்கியவர்கள் நாம் நான் பேசிக் கொண்டிருப்பதைப் பெரிதாக்கி உங்கள் காதுகளில் செலுத்துகிறதே இந்த ஒலிபெருக்கி, இதன் ஆரம்ப நிலை வெறும் இரும்புதான். வெறும் இரும்பு தட்டி நிமிர்த்திப் பயனுள்ளதாக்கப் பட்டிருக்கிறது. அதுபோல் வெறும் கல், சிற்பியின் சிந்தனைச் சிறப்பாலும் கற்பனை வளத்தாலும் கலைத் துடிப்பாலும் கடவுட்கோலம் எடுத்திருக்கிறது. கடவுள் உருவங்களைக் கடவுளாக எண்ணும் நிலை வளர வேண்டும்.

செவிடனுக்குக் காது கேட்பதில்லை. அதைப் போல் நெஞ்சம் செவிடாக இருப்பவனுக்கு இறைப்பற்று ஏற்படுவதில்லை. நெஞ்சச் செவிடுநீங்க நெஞ்சத்தால் விரிந்தவர்கள் உதவ வேண்டும்.

இறைவனை வழிபடும் முறையிலே உயிர்ப்பலி மிகவும் கொடுமையானது. உயிர்ப்பலியை ஆண்டவன் விரும்புவதாக எண்ணக்கூடாது. தனது உயிர்களை வருத்தி அழிக்க ஆண்டவன் விரும்புவதில்லை. சிலர் இறைப்பற்று என்று கூறி, ஆடு, கோழிகளைப் பலியிடுகிறார்கள். அது தவறு. இத்தகைய பாதகச் செயல் பரமன் சந்நிதானத்தில் நடவாது தடுக்கப்பட வேண்டும். பாரம்பரியமாக இருந்து வந்த வழக்கம் என்பதால் உயிர்ப் பலியைத் தடுக்கச் சிலர் மறுக்கிறார்கள். அறிவு விரியாத அந்தக் காலத்து விவகாரகங்கள் அனைத்தும் அறிவு விரிந்த-நாகரிகம் வளர்ந்த இந்தக் காலத்தில் நடைபெறுவது நல்லதல்ல.

நமது காலிலே ஒரு ஆணி குத்தினால் “ஆ!” என்று அலறித் துடிக்கிறோம்! ஆட்டை வெட்டும் பொழுது அது என்ன பாடுபடும். ஆன்மாக்களுக்கு அருள் சுரக்கும் ஆண்டவன் அதைப் பொறுப்பானா?