பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருள்

409


கருத்து அறியாமையின் காரணமாக அப்படி இருந்தது என்று இன்று உணர்கின்றோம். அன்று பிரச்சினைகளை அணுகும் முறை நம்பிக்கை அடிப்படையிலான முறை; இன்று அப்படியல்ல. இன்று அறிவறிந்த நிலையில் சிந்திக்கின்றோம். நமது யுகம், அறிவியில் யுகம்! நமது பூமியில் உயிரினங்கள் தோன்றி 400 கோடி ஆண்டுகள் ஆகின்றன. மனித இனம் தோன்றி 40 இலட்சம் ஆண்டுகள் ஆகின்றன. நீண்ட இந்தக் காலக்கட்டத்தில் மானுடம் மெள்ள மெள்ள பரிணாம வளர்ச்சியில் மானுடமாயிற்று. மானுடம் தோன்றிய உடனேயே அறிவியல் விழிப்பும் மெள்ள மெள்ளவே வளர்ந்து வந்தது. இந்தத் தலைமுறையுகம், அறிவியலை முழுமையாக உணர்ந்த யுகம்! அறிவியலின் பலன்களை முழுமையாக அனுபவிக்கும் பேறு இந்தத் தலைமுறைக்குத்தான் கிடைத்துள்ளது. இந்தப் பேறு நீடிக்குமா? நீடித்து வளருமா? இருபத்தோராம் நூற்றாண்டின் நுழைவாயிலில் நிற்கும் நாம் நம்மையே அழித்துக் கொள்ளாவிட்டால் இந்தப் பேறு நிலைக்கும். ஆனால் நம்முடைய எதிர்பார்ப்பு. பிழையெனத் தெரிகிறது; வளைகுடாவில் போர் தொடங்கி விட்டது! இந்த மானுடத்தின் தலைவிதியை யார் நிர்ணயிப்பது. நல்லவண்ணம் அமைய வேண்டும் என்று பிரார்த்திப்போமாக!

சமாதானம் என்றால் என்ன? போர் இல்லாத நிலைமட்டுமல்ல. சமாதானம் என்பது போர் இல்லாத நிலை என்றால் “மயான அமைதி” என்று பொருள் கொள்ளல் கூடாது! சுரண்டும் அதிகார வர்க்கத்திற்குப் பணிந்து வாழ்தலுமல்ல. நாம் ஏதாவது நல்லது செய்தால் அதனால், மற்றவர்களுக்கு நோதல் ஏற்படும் என்று எண்ணி, யாதொன்றும் செய்யாதிருத்தலும் அல்ல. சமுதாயம் உயிர்ப்புடையது வாழ்வது. மானுடத்தின் வாழ்வுக்குத் தேவைகள் பலப்பல உள்ளன. வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தி செய்யப் பெறும் நிலையில்தான் அமைதி தோன்றும்; சமாதானம் தோன்றும்? மக்கள் தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி

கு.XII.27.