பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

430

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இவர் வற்புறுத்திய ஐந்து நற்குணங்களுன் கன்ஜு என்பது இரண்டாவது. அதாவது, “நாம் பிறருடன் சரியாகப் பழக வேண்டும்; எவருடனும் முறை தவறி நடக்கக்கூடாது; நம் உள்ளத்தில் தயையும் கருணையும் அன்பும் இருக்க வேண்டும்” என்பதாகும்.

இந்திய மண்ணில் தோன்றிய சமயங்கள் சில. அவற்றுள் புத்த மதமும் ஒன்று. சித்தார்த்தரைப் புத்தராக்கியதே அன்புதான். புத்தரின் அன்புநெறி கிறித்துப் பிறப்புக்கும் முன்பே போரில்லாத அமைதி நெறியை வையகத்துக்குத் தந்தது. புத்தர் அன்பின் வடிவமாகவே வாழ்ந்தார். அவர் மனித குலத்துக்கு உய்யும் நெறியாகக் காட்டியது அன்பு நெறியேயாம். ‘தாய் தன் உயிருக்கு ஆபத்து வருவதையும் கருதாது. தன் ஒரே பிள்ளையைப் பாதுகாப்பது போல மனிதன் எல்லா உயிர்களிடமும் எல்லையற்ற அன்பு கொண்டிருக்க வேண்டும் என்றும் தங்கு தடையின்றி பகையோ விரோதமோ இல்லாமல் மனிதர் தமக்கு மேலும் கீழும், அங்கும் இங்கும் அகில உலகினிடமும் எல்லையற்ற அன்பு கொண்டு வாழ வேண்டும் என்றும் புத்த சமய வேதமாகிய பிடகம் பெருமையுடன் கூறுகிறது.

இந்தியச் சமயங்களுள் சமண சமயமும் ஒன்று. சமண சமயத்தின் புராணங்கள் தயையே தர்மத்தின் வேர் என்று வற்புறுத்துகின்றன. ஜினேந்திர தேவன் தர்மத்தின் இறுதி எல்லையிருப்பது கருணையில் என்று கூறியிருக்கிறார். கருணையில்லாத மனிதரிடம் தர்மம் இம்மியளவும் இராது என்றும் கூறுகின்றது. மகாவீரர் ‘பகைவனோ நண்பனோ விரோதியோ வேண்டியவனோ எல்லா உயிர்களையும் எல்லா மனிதர்களையும் ஒன்றுபோல் மதித்து எல்லோரையும் தாமாகக் கருதுதலே அகிம்சை’ என்று அருளிச் செய்துள்ளார்.