ஆலயங்கள் சமுதாய மையங்கள்
33
இன்பம் வழங்குவதற்காகவே தமது ஆளுடைய நாயகியைக் கரும்புவில் ஏந்தச் செய்திருக்கின்றான். கரும்புவில் போகத்தின் சின்னம். சுந்தரருக்குத் திருமணம் செய்து வைத்தான் இறைவன். தான் விரும்பிய காதலனை மணக்க முடியாமல் தடை செய்கின்ற, கொடுமை செய்கின்ற மனிதர் இன்று போலவே பண்டும் இருந்தனர். அத்தகையோரை மறுத்துப் போராடி, ஒரு பெண் தான் விரும்பிய ஒரு காதலனை மணக்கத் துணை செய்தவன் இறைவன். இறைவன் அடியாராகிய திருஞானசம்பந்தரும் திருமருகலில் செட்டிப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்த பெற்றிமையை எங்ஙனம் புகழ முடியும்! ஆதலால் திருக்கோயில் மனையறத்தின் மாண்பறத்தையும் விளக்கியது; வளர்த்தது; மனித குலம் தலைமுறை தலைமுறையாகத் தழைத்து வளர வழி கண்டது.
புலவி தீர்த்தல்
பேரன்புடையீர், திருக்கோயில் அமைப்பில் வளர்ந்தவை திருமணங்கள் மட்டுமல்ல, கற்பியல் வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ ஊடலும் ஊடல் முற்றிய நிலையில் புலவியும் தோன்றி வருகின்றன. இதனால் கருத்தொருமித்து வாழ வேண்டிய இருவர், உள்ளத்தால், உணர்வால் பிரிந்து விடுகின்றனர். இந்தப் பிரிவு வருந்தத்தக்க பிரிவு! இத்தகைய பிரிவு, இருபாலாருக்கும் பெருந்துன்பம் தருவது. இத்தகைய பிரிவுகளைத் திருக்கோயில்கள் அங்கீகரிப்பதில்லை. திருக்கோயிலைச் சார்ந்து வளர்ந்த வாழ்வியல் தத்துவம், ஊடல் தணிதலுக்கும் புலவி தீர்த்தலுக்கும் உரிய முயற்சிகளை மேற்கொள்ளும். திருநீலகண்டர் வாழ்க்கையில் அவருக்கும் அவர்தம் மனைவிக்கும் ஓர் ஆழமான புலவி தோன்றி விட்டது. பல ஆண்டுகள் பிரிந்து வாழ்கின்றனர். தில்லையம்பலத்திலுள்ள ஆடல் வல்லானுக்கு இவர்களின் புலவியும், புலவி வழிப்பட்ட பிரிவும் உறுத்தலைத்