பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

488

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பிற்காலத்தில் சமயநெறிகள் தடம்புரண்டு உடைமை, பணம் ஆகியவற்றின் தடத்தில் நடந்து சுரண்டும் சமுதாயத்திற்கு அனுசரணையாக இருந்து வேற்றுமைகளை வளர்த்து இந்தப் புவிக்கோளை இரத்தத்தால் கழுவி நகரத்தைப் படைத்த கொடுமைகளையும் மறந்து விடுவதற்கில்லை.

ஆயினும் இன்னமும் மனிதம் வளர, நம் நாட்டின் சமய ஞானம் துணை செய்யும், துணை செய்யவேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கை வெற்றிபெற சிந்தனையாளர்கள், செயல் வல்லுநர்கள் துணை செய்யவேண்டும்.

இந்த வாழ்க்கை அழுவதற்காக அல்ல. சென்ற காலத்தில் அழுதது போதும். சென்ற காலத்திலிருந்து விடுதலை பெறவேண்டும். முன்னே தோன்றிய பழைமையைப் பின்னர்ப் புதுமையாக்கி வாழ்க்கையைப் பயனுடைய தாக்கப் பயன்படுத்துதல் வேண்டும். உயிர்கள் குறைவிலாது வாழ்வதற்குரியனவாகச் செய்தாக வேண்டும். மாந்தரிடத்தில் தோழமைப் பண்பை வளர்க்க வேண்டும். இதனை இன்றைய சமயம் செய்தால் எதிர்காலம் உண்டு.