பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

490

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


படைக்கப்பெற்றது என்ற கருத்தும் உதவுகிறது; உலகம் இறைவனுடைய திருவருள் நோக்கால் மாயையில் தோன்றியது என்பாருமுளர். இறைவனே உலகம் என்றும் உலகமே இறைவன் என்றும், பேசப்பட்டு இருக்கிறது. எது எப்படியிருப்பினும் உயிர் வர்க்கங்கள் கடவுளால் படைக்கப்பட்டவையல்ல என்று தமிழ்ச் சமய மரபு அறுதியிட்டுக் கூறுகிறது. இங்ஙனம், தமிழிலக்கிய மரபில் பல குரல் உலகத்தைப் பற்றிய கருத்தில் ஒருமைப்பாடில்லாது போனாலும் உலகம் கடவுளால் படைக்கப்பட்டதன்று. உலகம் தானே தோன்றியது. இந்த உலகத்தின் இயக்க ஆற்றலைக் கடவுளாகவே கருதினார்கள் என்ற கருத்து லெனினியத்துக்குச் சார்பாக அமைந்திருக்கிறது. பொதுவாக இந்தக் கருத்தே வலிமை பெற்றும் வளர்ந்து வந்திருக்கிறது.

சங்கத் தமிழ் நூல் ஐங்குறுநூறு ஒரு சிறந்த இலக்கியம். ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து ஓர் இனிய பாடல், அந்தப் பாடல்,

“நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே!

என்பது உலக உயிர்கள் பரிணாம வளர்ச்சிக்கு ஆணும் பெண்ணும் இயைந்த கூட்டு வாழ்க்கை இன்றியமையாதது. அவ்வழித் தோன்றும் உயிர்த் தோற்றமே இயற்கை அஃதில்லாத பெளராணிகத் தோற்றங்கள் அறிவியலுக்கும் ஒத்தன அல்ல; இயற்கையோடும் இயைத்தனவாகா. அத்தகைய அநாகரிகப் படைப்புகள் பேதைமைத் தன்மையின் படைப்புகளேயாம். அதனால், உலகிற்குக் கடவுளைத் தந்தையாகக் கருதிய தமிழ், அவனை மங்கை மணாளனாகக் கண்டது. ஆனால், அந்தப் படைப்பு தத்துவப் படைப்பேயாம். பருவுடல் வழிப்பட்ட பால்படைப்புமன்று கூட்டு மன்று.