பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தொழிலில் சமத்துவம்

திருக்கோயிலைச் சார்ந்து வாழ்ந்த சமுதாய அமைப்பில் பல்வேறு குல அமைப்புகள் இருந்தன. அவற்றுக்கிடையே சிற்சில வேறுபாடுகளும் இருந்தன. குலநெறி முறைகளுக்கேற்பப் பழக்கங்கள் அமைந்திருந்தன; வழக்கங்கள் அமைந்திருந்தன. ஆயினும் அவர்களுக்குள் அற்புதமான பொதுமை நிலவியிருந்தது. அவர்களுக்கிடையில் பிரிவினை இல்லை; பிரிவினை வகைப்பட்ட பகைமை இல்லை. பல்வேறு குலப்பிரிவினரும் தத்தம் குலமரபுகளுக்கேற்ப அவரவர் தத்தம் தொழில்களை இயற்றி வந்தனர். சமுதாயம் அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது. நம்பிக்கையும் நல்லெண்ணமும் யாண்டும் நிலவியிருந்தன. குலப்பிரிவினைகள் உறவுக்கும், உடனிருந்து உண்ணுதலுக்கும் தடையாக இருந்ததில்லை. ஆதிசைவ குலத்திற்பிறந்த ஆரூரர், உருத்திரகணிகையர் குலத்தைச் சார்ந்த பரவையாரை மணக்கின்றார்; வேளாளர் குலத்தைச் சார்ந்த சங்கிலியாரை மணக்கின்றார். அந்தண குலத்தைச் சார்ந்த அப்பூதியடிகள் திருநாவுக்கரசரை ஞானாசிரியராக ஏற்றுக் கொள்கின்றார், ஆதி திராவிடர் வகுப்பினைச் சார்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருஞான சம்பந்தருக்கு யாழ் வாசிக்கின்றார். அந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருநீலநக்க நாயனாரின் வேள்விச் சாலையில் தங்கியிருக்கின்றார்.

“நின்ற அன்பரை நீலகண் டப்பெரும் பாணர்க்கு
இன்று தங்கஓர் இடங்கொடுத் தருளுவீர் என்ன
நன்று மின்புற்று நடுமனை வேதியின் பாங்கர்ச்
சென்று மற்றவர்க்கு இடம்கொடுத்தனர்திரு மறையோர்”

என்பது திருத்தொண்டர் புராணம்.