பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

41



நற்றமிழ் ஆரூரரும் சேரமான் பெருமான் நாயனாரும் உற்ற தோழராக விளங்குகின்றனர். அப்பரடிகளும் திருஞான சம்பந்தரும் முருக நாயனாரும் உடனிருந்து உண்டு பயின்று வாழ்கின்றனர் திருப்புகலூர்த் திருக்கோயில் வளாகத்திற்குள்! சேக்கிழார் இந்நிகழ்வை “உடனுறைவின் பயன் எய்தினார்! என்று பாராட்டுவார். திருக்கோயில் தத்துவத்தில் குல வேற்றுமைகள் இருந்தன. ஆனால், அவற்றைக் கடந்து பொது உறவு வளர்ந்தது! வேற்றுமையின்றி அவரவர்தம் தொழில்களை இயற்றினர்! அஃதோர் ஒப்பற்ற சமுதாயம்! ஆம்! திருக்கோயிலை மையமாகக் கொண்டு வாழ்ந்த சமுதாயம், ஒப்பற்ற சமுதாயம்!

நீர்நிலைப் பாதுகாப்பு

மனித வாழ்க்கைக்குத் தண்ணீர் இன்றியமையாதது! “நீரின்றமையாது உலகு” என்று திருக்குறள் கூறும். திருக் கோயிலினின்றும் பிரிக்கப்படாது உடனிருந்து இயங்குவது தீர்த்தம் அதாவது திருக்குளம், தீர்த்தத்தைச் சார்ந்தே திருக்கோயில் விளங்குகிறது. திருக்கோயில்களைச் சார்ந்து மிக அகலமாகவும் ஆழமாகவும் எழிலுற அமைந்துள்ள திருக் குளங்களைக் காணும் பொழுதெல்லாம் நமது சமுதாய முன்னோடிகள், சமுதாய அமைப்பை நிர்மாணித்த திறன் நமக்குப் புலப்படுகிறது. ஆற்றங்கரைகளிலும் பெரிய திருக் குளங்களின் கரைகளிலும் திருக்கோயில்கள் விளக்க முற்றன. இந்தத் திருக்குளங்களைப் பாதுகாத்தல், தூய்மையாகப் பேணுதல் திருக்கோயிலின் கடமையாக இருந்தது. மானிடர்உடல் வெப்பம் தணியத் தீர்த்தத்தில் மூழ்கினர். ஆன்மாவைப் பற்றி நிற்கும் ஆணவ வெப்பம் தணிய இறைவனின் திருவருட் புனலில் மூழ்கினர். இத்தகைய திருக்கோயில்களின் திருக்குளங்களை அவ்வப்பொழுது தூர்வையெடுத்துத் துய்மைப்படுத்திப் பாதுகாத்து வந்துள்ளனர். திருவாரூர்க் கமலாலயம் என்று புகழ்பெற்றகு.XII.4.