பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஊதியம் பெறாத உழைப்பின் மூலமே, திருக்கோயில்கள் தூய்மையுடன் பேணப்பட வேண்டும்.

திருக்கோயிலில் ஆரவாரமான செலவுகளைத் தவிர்க்க வேண்டும். திருக்கோயிலில் பொது நிதி ஆதாரத்தை வலிமைப்படுத்தி, வளமாக வாழ வாய்ப்பிழந்தவர்களுக்கு வாய்ப்பை உருவக்கி உதவி செய்து அவர்களை உயர்த்த வேண்டும். மீண்டும் திருக்கோயிலை மையமாகக் கொண்ட சமுதாயத்தை அமைப்பது நமக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது!

திருக்கோயில்கள் சமுதாயத்தின் மையங்களாகவும் சமுதாயத்தின் உடைமைகளாகவும் இருக்க வேண்டும். திருக்கோயில்கள் தனியார் உடைமைகளாகவும் மதச்சார்பற்ற அரசாங்கத்தின் உடைமைகளாகவும் இருப்பது விரும்பத்தக்கதல்ல! திருக்கோயில்களை மீண்டும் சமுதாய மையமாக மாற்றுவோம்! நம்முடைய சமுதாய வாழ்வியலைத் திருக்கோயிலைச் சார்ந்ததாக அமைப்போம்! முன்னையது உடனடியாக நிகழக் கூடியதன்று! இது தெரிந்த உண்மையே! ஆயினும் பின்னையது - அதாவது சமுதாய வாழ்வியலைத் திருக்கோயிலைச் சேர்ந்த்தாக அமைப்பது என்ற கோட்பாட்டை, உடனடியாகத் தொடங்க யாதொரு தடையு மில்லை! இந்த முயற்சியை உடனடியாக மேற்கொள்வோ மானால், நம்முடைய தலைமுறையிலேயே திருக்கோயில்கள் மீண்டும் சமுதாய மையங்களாக விளங்கும் பொற்காலம் தோன்றும் ! ‘கோயிலைத் தழுவிய குடிகள், குடிகளைத் தழுவிய கோயில்!’ - இதுவே நெறிமுறை! செயற்பாடு! தவம் ! அனைத்தும் ஆம்!