பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கலகப் பூச்சிகளாக வாழ்ந்து, வெற்று வேடிக்கை மனிதராய் மாண்டு போகாமல் தடுக்க, சமயமும் கலையும் துணை செய்வன. கலைகளை அனுபவிக்கும் இதயமுடையோர் குற்றமுடையோராய் இருத்தல் அரிது. சமயம் சார்ந்த வாழ்க்கையுடையோர் யாதோர் உயிருக்கும் தீங்கு செய்யார். கலைகளின் வளர்ச்சி, கறைகளைத் தவிர்க்கும்; குற்றங்களைக் குறைக்கும்; சிறைச்சாலைகளை மூடும். பரஸ்பரம் நல்லெண்ணமும் அமைதியும் தழுவிய சமுதாய வாழ்க்கையை உருவாக்கும். இம்மண்ணுலக வாழ்க்கை அமைதியாக நடைபெறச் சமயமும் தேவை; கலைகளும் தேவை. இனி எதிர்வரும் காலத்திலும் இன்பம் தழுவிய வாழ்க்கையை அமைக்கச் சமயமும் தேவை; கலைகளும் தேவை.

கலைகளில் முதலில் தோன்றியது கூத்து. மொழி தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூத்துத் தோன்றியிருக்க வேண்டும். மக்கள் தம்முடைய உணர்வுகளை, நினைத்திடும் பொருட் குறிப்பை, முதன் முதலில் அங்க அசைவுகளால்தான் புலப்படுத்தினர். அதுவே காலப்போக்கில் கூத்தாயிற்று. இக்கூத்திலிருந்துதான் நாட்டியம், நாடகம், திரைப்படம் முதலிய கலைகள் தோன்றின. தமிழரின் தலைசிறந்த வழிபாட்டுத் திருவுருவம் ஆடல்வல்லான் திருவுருவம்! வழிபாட்டுத் திருவுருவங்களில் பழமை சான்றதும் எழில் வாய்ந்ததும், இன்பம் அளிப்பதும் ஆடல்வல்லான் திருவுருவமே!

“குனித்த புருவமும் கொவ்வைச்செவ்
வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல்
மேனியில் பால்வெண் ணிறும்
இனித்த முடைய எடுத்தபொற்
பாதமும் காணப் பெற்றால்