பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

57


மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநி லத்தே!”

(நான்காம் திருமுறை - 783)

என்று அப்பரடிகள், ஆடல்வல்லானைப் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்த்து இங்கு நினைவுகூரத் தக்கது. தமிழரின் வழிபடும் தெய்வங்களில் சிறப்புடைய சிவம், சக்தி இருவருமே ஆடற்கலை நிகழ்த்தியிருக்கின்றனர். இன்றும் ஆடிய திருக்கோலத்தில் உள்ள அத்திருமேனிகளுக்கு வழிபாடு செய்யப் பெறுகின்றது. ஆடற்கலையில் நூற்றுக்கணக்கான வண்ணங்கள் உண்டு. பழந்தமிழகத்தில் திருக்கோயில்களில் அன்றாட வாழ்வியலில் நாட்டியமும் இடம் பெற்றிருந்தது. சோழர் காலத்தில் “பதியிலார்” என்று பெருமை பெற்றவர்கள் திருக்கோயில்களில் ஆடற்பணி செய்துகொண்டிருந்தனர். இங்ஙனம் பணி செய்தவர்களில் தலைசிறந்தவர்களுக்குச் சோழ மன்னர்கள் ‘தலைக்கோல்’ என்னும் பட்டம் அளித்துச் சிறப்புச் செய்துள்ளனர். இங்ஙனம் பட்டம் பெற்ற ஆடற்பெண் “தலைக்கோலி” என்றழைக்கப் பெற்றாள். திருக்கோயில்களில் நடனமாடுவதற்கு, மாமன்னன் இராசராசன் 400 பெண்கள் வரை நியமித்திருக்கிறான். நடனமாடும் இவர்களுக்குப் பக்க வாத்தியமாக, பாடவ்யம், கானபாடி, உடுக்கை வாசிப்போர், கொட்டி மத்தளம் வாசிப்போர், முத்திரைச் சங்கு ஊதுவார், பக்க வாத்தியர், காந்தர்வர், உவைச்சர் என்றெல்லாம் பலர் இசைப் பணி புரிந்தனர் என்று கல்வெட்டுச் செய்திகள் அறிவிக்கின்றன.

“ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்

கு.XII.5.