பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் திளைத்தார்”,

(பெரியபுராணம், தடுத். 106)

என்று ஆடற் பெருமானை ஆரூரர் வணங்கி மகிழ்ந்த செய்தியினைச் சேக்கிழார் பெருமான் சிந்தை குளிரப்பாடியுள்ளார். பொறிகள், புலன்கள் ஒன்றிய ஐந்து பேரறிவின் உணர்வுகளும் கண்களிலேயே நின்று ஆடல் வல்லானைக் கண்டு மகிழ்கின்றன. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அகக்கருவிகள் - அனுபவக் கருவிகள் நான்கும் சிந்தையை இடமாகக் கொண்டு விட்டன. மானுடத்தின் குணம் மூன்று. தாமதம், இராசதம், சாத்துவிகம், ஆகிய இம்மூன்று குணங்களில் சாத்துவிகமே உயர்ந்தது; சிறந்தது. ஆடல் வல்லானின் ஆனந்தக் கூத்தில் ஈடுபடும் ஆன்மா, இன்ப அனுபவங்களை அடைகின்றது. இதனினும் சிறந்த பேறுண்டோ? திருக்கோயில்கள் வளர்த்த வாழ்வியற் கலைகள், மனித வாழ்வை ஈர்த்துப் பதப்படுத்தி இன்பம் அளித்து வாழ்வளிக்கின்றன.

கலை, நாகரிகம் அடைந்த சமுதாயத்தின் படைப்புக்களுள் ஒன்று. கலைத்துறை ஒன்றல்ல; பலப்பல. அறுபத்து நான்கு கலைகள் என்று கூறுவர். கலை, அனுபவத்தில் பிறந்து, அனுபவத்திற்கு உரியதாகி, அனுபவத்தை வளர்த்துச் செழுமைப்படுத்துவது. இந்தக் கலைத்துறையில் தமிழகம் வரலாற்றுக் காலந்தொட்டுப் புகழ் பெற்று வளர்ந்து வந்திருக்கிறது. சங்க காலத்தில் கலை உலகு திறம்பட வளர்ந்திருந்தது. நாளை, பொழுதுகளாகப் பிரித்து, அந்தந்தப் பொழுதுக்குரியவாறு பண்களையும் நிர்ணயித்திருந்தனர். இதுபோலவே வேறுவேறு நிலைகளில் பாடும் பாடல்களும் வழக்கத்திலிருந்தன. விளையாடும் காலத்தில் பாடுகின்ற பாட்டுக்கள் “கந்துகவரி” முதலியன. “மங்கல வாழ்த்துப் பாடல்”, “செருப்பறை”, “வள்ளைப்பாட்டு” முதலிய பாக்களும் சங்க