பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

59


காலத்தில் பயின்றன. இவையன்றி, ஆறுகள், கடற்கரைகள் முதலியவற்றின்-இயற்கையின் எழிலின்பத்தில் ஈடுபட்டுப் பாடிய பாடல்கள் “ஆற்றுவரி”, “கானல்வரி” முதலியனவாகும். சங்க நூல்களில் “பரிபாடல்” என்பதும் ஒன்று. அது முற்றிலும் இசைப் பாட்டினாலேயே ஆனது.

கலை, கலைக்காகவே என்பது ஒரு கொள்கை இல்லை, கலை வாழ்க்கைக்காகவே என்பது தமிழர் கொள்கை அதிலும் உலகாயத வாழ்க்கைக்கன்றி, அருள் நலம் சார்ந்த சமய வாழ்க்கைக்குக் கலை, தொண்டு செய்ய வேண்டும் என்பது தமிழர் கொள்கை. அதனாலேயே தமிழகத் திருக் கோயில்களெல்லாம் இசைக் கலையைப் போற்றி வளர்த்தன. குரலிசை, வாத்திய இசை முதலியவை திருக்கோயில்களிலேயே வளர்ந்தன. “ஊசற்பாட்டு”, “திரு அம்மானை’ “திருப்பொற்சுண்ணம்” முதலிய இசைப் பாடல்கள்-பக்திப் பாடல்கள் தமிழ் மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து இருந்தமையே இதற்கு எடுத்துக்காட்டு.

இசைவிப்பது இசை! ஆன்மாவிற்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள இடைவெளியை இட்டு நிரப்பி இசைவிப்பது இசைதான். இசை, இறைவனை நினைந்து நினைந்து எண்ணுதற்குரிய எளிய சாதனமாகும். இன்னிசையோடு தமிழ்ப் பாடல் பாடியருளி இறைவனைத் தொழுத திருஞான சம்பந்த சுவாமிகளை, “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாராட்டுவார். சேக்கிழார் பெருமான் “கானத்தின் எழுபிறப்பு” என்று வாய் மணக்கச் சிறப்பித்துப் பாடுவார். திருஞான சம்பந்தரும் பண்ணொடு கலந்த தமிழில் யாழிசை கூட்டி வழிபாடு செய்து வந்தார். “தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்” என்றார் அப்பரடிகள். இறைவன் “பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளி”னான் என்று மாணிக்கவாசகர், கூறினார். இங்ஙனம் சமய உலகில் இசை ஏற்றம் பெற்றிருந்தது. திருமுறைகள் அனைத்தும் பண் சுமந்த பாடல்களே!