பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இசைப் பாடல்களே! தமிழோடு இசை கலந்த இப்பாடல்களைக் கேட்க இறைவன் பெரிதும்விரும்பினான். “தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினான்” இறைவன். இத்தகைய திருமுறை இசைக்கலை, திருக்கோயில்களை மையமாகக் கொண்டே வளர்ந்தது. இறைவன் புகழ்பாடும் பண்ணிறந்த பாடல்களாகத் திருமுறைப் பாடல்கள் விளங்குகின்றன.

இறை நலம் சான்ற இன்பத் தமிழிசைப் பாடல்களாகத் திருமுறைப் பாடல்கள் இருந்தமையால் இறைவனே இத்திருப் பாடல்களுக்குச் சான்று செய்தான். “தனதுரை"யென ஒப்பம் தந்தான். அதனால் இத்திருப்பாடல்கள் ஐந்தொழில்களையும் நிகழ்த்தும் ஆற்றலுடையனவாய் இருந்தன. நீரையும் நெருப்பையும் வென்று விளங்கின.

“பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
காலனை அன் றேவிக் கராங்கொண்ட-பாலன்
மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தம்
கரணம்போல் அல்லாமை காண்”

என்று திருக்களிற்றுப்படியார் சிறப்பித்துக் கூறும்.

தமிழர் தம் சமய வாழ்க்கையில் பண்ணிசையும் பரதக் கலையும் நிலையான இடம் பெற்றவை; பெருமை சேர்த்தவை. அதனால் பிற்காலத் தமிழரசர்கள் இத்திரு முறைப் பண்ணுக்கு நிறைந்த ஆக்கமளித்தனர். குறிப்பாக மாமன்னன் இராசராச சோழன் தமிழ்ப் பகைவரின் சூதிலிருந்து திருமுறைகளை மீட்டுத் தந்தான். தான் வணங்கிய இறைவனுக்குத் “தேவார தேவர்” என்று பெயர் சூட்டினான்; தமிழகத் திருக்கோயில்களில் திருமுறைப் பதிகம் விண்ணப்பிப்பார் பலரை நியமித்தான். திருமுறைகள் மனித நெஞ்சத்தை உருக்கும் தன்மையன. திருமுறைகள் ஓதப் பெறாத திருக்கோயில்கள் பண்டைய தமிழகத்தில் இருந்ததில்லை. மீண்டும் அதே நிலை உருவாக வேண்டும். தமிழ்-