பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இறைவா தடவரைத் தோட்கென்கொ
லாம்புகுந் தெய்தியதே.”

என்று வரும் திருக்கோவையார்த் திருப்பாடல் ‘ஏழிசைச் சூழல்’ என்று குறிப்பது அறிக. தமிழிலக்கியங்களிற் பல, இசைக்கலை தழுவியன. இசை, உயிர்! பாடல், உடல்! “பண் என்னாம் பாடற்கு இயை பின்றேல்” என்று திருக்குறள் கூறும். திருக்கோயில் வளாகத்தைச் சுற்றித் தமிழிசை வளர்ந்தது. பண்ணொன்றைப் பாடிப் பரிசில் பெற்றனர் பலர். இறைவனைத் தூதாக நடக்கச் செய்தது, சுந்தரரின் இசைத்தமிழ். எலும்பைப் பெண்ணுருவாகக் கண்டது திருஞானசம்பந்தரின் இசைத்தமிழ். திருமறைக்காட்டுத் திருக்கதவம் திறந்தது அப்பரடிகளின் பண்ணிசைத் தமிழ். இங்ஙனம் தமிழிசை, திருக்கோயில்களைத் தழுவியிருந்த சமுதாயத்தின் துயரங்களைத் துடைத்து வாழ்வித்த வரலாறுகள் இவை.

இசை, மக்களின் வாழ்க்கையில் எழுச்சியும் ஏற்றமும் மிக்க உணர்வுகளைத் தந்து வழிநடத்தியது. திருக்கோயில்களில் வளர்ந்த பண்ணிசையில் கற்பனை வளமும் எடுப்பும் உண்டு. தருமபுரத்தில் பாடிய யாழ்மூரிப்பண் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு! இவ்வாறு தமிழினத்தின் வரலாற்றை உந்திச் செலுத்திய பெருமை திருமுறைப் பண்ணிசைக்கு உண்டு.

“ஏழிசையாய் இசைப் பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான் செய்யும்
துரிசுகளுக்கு உடனாகி
மாழை ஒண்கண் பரவையைத் தந்து
ஆண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்ஆருர் இறைவனையே!”