பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

85


உணர்த்திய திருமுறை நெறிதான் வலிமையுடையது, இன்றைக்கு ஏற்புடையது. அது மட்டுமன்று, சைவப் பெருநெறிக்கு இடர்ப்பாடுகள் வந்துற்றபோதெல்லாம் சிவாகமங்கள் யாதொரு அரணும் செய்யவில்லை; கையற்றுப் போயின. ஆனால் திருமுறைகள்தான், சிவ நெறியின் மாண்பை, திருவருள் துணைகொண்டு நிலை நிறுத்தி வெற்றி கொண்டன. அதனால் சிவாகமங்களுக்குக் கொடுக்கும் முதன்மையைவிட, திருமுறைகளுக்கு அதிக முதன்மை கொடுக்க வேண்டுமென்பது நமது கருத்து. சிவாகமங்களை விட ஞானமும் ஞானத் தமிழும் போற்றுதலுக்குரியன என்பதையும் பயன்தரத்தக்கன என்பதையும் சில நிகழ்வுகள் நமக்கு அறிவுறுத்துகின்றன. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் சிவாகமங்களால் மூர்த்தியைப் பந்தனம் செய்ய முடியாது தவித்தபொழுது, தமது தாம்பலத்தின் வழி, கருவூர்த் தேவர் பந்தனம் செய்து தந்தார்.15 இது ஞானத்தின் வெற்றியல்லவா?

சிதம்பரத்தில் ஆடல்வல்லான் திருக்கோயிலில் சிவகாமவழிக் கிரியைகளைச் செய்து மந்திரங்களை ஓதி, திருவிழாவிற்குக் கொடி ஏற்றினார்கள். ஆனால் கொடி ஏறவில்லை உமாபதிசிவம் செந்தமிழில் கொடிக்கவி பாடி ஏற்றுவித்து அருளியமை நாடறிந்த செய்தி. திருக்கோயில் தேரை ஒட்டி நிலை நிறுத்திய பெருமை, திருப்பல்லாண்டுக்கு உண்டு. ஆதலால் ஆகமங்களினும் திருமுறைகள் அருள்நலஞ் செறிந்தன; வலிமையுடையன; போற்றுதலுக்குரியன; பயன்தரத்தக்கன என்பது பெறப்படும் உண்மையல்லவா? ஆதலால் சிவாகமங்களிலும் போற்றிப் பின்பற்றுதலுக்குரியன திருமுறைகளும் மெய்க்கண்ட சாத்திரங்களும் என்பது விளக்கமுறுகிறது. எனவே மெய்கண்ட சாத்திரங்களுக்கும், திருமுறைகளுக்கும் மாறுபடாத சிவாகமங்களே ஏற்புடையன. மாறுபாடு உளதாயின் திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள் இவற்றின் கருத்துக்களே ஏற்று ஒழுகத்தக்கன.