பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



“சிவாகமங்களுக்குச் சிவாசாரியார்கள் மட்டுமே அதிகாரிகள் அல்லர். சிறப்புடைய உத்தமர் அனைவரும் சிவாகமங்களுக்கு உரிமையுடையவரே என்று சமய நெறியும்16 யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரின் இரண்டாம் சைவ வினாவிடையும்17 எடுத்தோதுகின்றன.

சைவ சமயத்தில் சிவாச்சாரியார்களுக்கு இருக்கிற முக்கியமான இடத்தை நாம் அறிந்து பாராட்டி நடைமுறைப் படுத்தவே விரும்புகின்றோம். ஆனாலும் “அவர்கள் சிவாச்சாரியார்களாகவே பிறக்கிறார்கள்” என்பது பொருத்தமன்று. சிவாச்சாரியார்கள் சிவபெருமானால் சிவாச்சாரியார்களாகவே பிறப்பிக்கப்பட்டுள்ள ‘சிவசிருட்டி’ என்பதும் பொருத்தமன்று. இக்கருத்துக்கள் தத்துவ இயலுக்கு முரண்பட்டவை. ‘சிவசிருட்டி’ என்பதற்குப் பொருள் சிவனாலேயே நேரிடையாகப் படைக்கப்பட்டவர் என்பது அன்று. மாயாகாரியப் படைப்பைச் சிவம் நேரிடையாகச் செய்வதில்லை. சிவம் திருவுள்ளம் பற்ற, அக்குறிப்பின்படி பிரம்மா சிருட்டிப்பதென்பதே சிவசிருட்டியின் விளக்கம். சிவத்தின் திருவுள்ளக் குறிப்பின்படி படைக்கப்படும் படைப்பு, தொன்மைக் காலத்தில் சிறந்த முதற்குடிக்கே அந்த இயல்பு பொருந்தும். அடுத்து வரும்பொழுது அசுத்த மாயையில் சேர்ந்த படைப்புக்களேயாம். ஆதலால் இன்றுள்ள சிவாச்சாரியார்களும், சிவாச்சாரியார்களாகவே பிறக்கிறார்கள் என்று கூறுவது தத்துவ இயலுக்கு முரணானது. ஆயினும் வழிவழியாகப் பெருமானுக்குப் பூசை செய்யும் குடி மரபில் வருவதால், அருணந்திசிவம் கூறும் நற்சார்பு இயல்பாகக் கிடைப்பதால், சிவாச்சாரியார் குடியில் தோன்றுபவர்களைச் சிவசிருட்டி என்று கூறுவது உலகியல் வழக்கு. ஆயினும் சிவாகமங்களைக் கற்காமலும், தீக்கை முதலியன செய்து கொள்ளாமலும், தீக்கை செய்து கொண்டு அதற்குரிய அனுட்டானங்களை முறையாகக் கடைப்பிடிக்காமலும் வழி வழியாக இருந்து வருகின்றவர்