பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

448

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நாட்டில் சுதந்திரம் எப்படி இருக்க முடியும் தனி மனிதனுக்கு உரிமை உண்டா இல்லையா? என்பது பேச்சல்ல! முதன்மைப்படுத்தக் கூடியது. முக்கியத்துவம் கொடுக்கக் கூடியது எது என்பதுதான் பேச்சு. சமுதாய உரிமை என்று பேசும்போதுகூட தனி மனித உரிமை ஒத்துக் கொள்ளப்பட்ட ஒன்றுதான். மலையிலே மழை பெய்து, வாய்க்கால்கள் வழியாக ஓடிக் கழனிகளுக்கு வந்து, மீண்டும் தனித்தனியாய்ப் பயிர்களுக்குத்தானே போகின்றது? அது போல, சமுதாய உரிமை – சோஷலிச உரிமை – பொது உரிமை என்று சொல்லுகின்ற போதும் கூட அது தனிமனிதனை வந்து சாரத்தான் செய்கிறது. எனவே, தலைப்பின் உட்பொருள் – நுட்பம், எது முதன்மைப்படுத்துக் கூடியது என்பதுதான். சமுதாய உரிமை முதன்மைப்படுத்தப் படும்போது, தனிமனித உரிமையை மறுப்பதாகக் கொள்ளக் கூடாது. சமுதாயப் பிரிவிலே தனி மனித உரிமை நசுக்கப்பட வேண்டும் – பொசுக்கப்பட வேண்டும் – ஒடுக்கப்பட வேண்டும் என்று கூறப்படுவது தவறு. அப்படித் தனிமனித உரிமை நசுக்கப்பட்டு – பொசுக்கப்பட்டு – ஒடுக்கப்பட்டு விட்டால் அவர்களெல்லாம் மிருகக் காட்சி கூண்டில் போய் வாழுவதா? தனிமனித உரிமை நசுக்கப்படுவதோ – பொசுக்கப்படுவதோ – ஒடுக்கப்படுவதோ நமது இலட்சியமல்ல. தனிமனித உரிமை சமுதாயத்திற்குக் கேடு தரும் என்ற ஓர் எண்ணம் வருகிறபோது, தனிமனித உரிமையை ஓர் எல்லைக்குள் கட்டுப்படுத்துவதுதானே தவிர தனி மனித உரிமையை நசுக்குவதும் பொசுக்குவதும் ஒடுக்குவதும் அல்ல சமுதாயத்தின் இயல்பு. எனவே, சுதந்திர நாட்டில் முதன்மைப்படுத்தக் கூடியது தனிமனித உரிமையா சமுதாய உரிமையா? இந்தக் கேள்வியே எப்பொழுது எழும் என்று கருதுகிறீர்கள்? ஓர் எடுத்துக்காட்டுக் கூறினால் நன்றாகப் புரியும்.

ஒரு மிராசுதார் இருக்கிறார். அவருக்கு உள்ளூரிலே இருபத்தைந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. மற்ற ஊர்களினும்