பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

501


இன்னலுறுகின்றார்கள். இவர்களுக் கெல்லாம் அறிவை, நிம்மதியைச் சலனமற்ற நிலையைக் கலைகள் காட்ட வேண்டும். நாட்டிலே நாடக மேடைகளிலே மட்டும் கலையும் கலையைச் சார்ந்த கருத்துக்களும் மின்னி முழங்கிவிட்டாற் போதாது. வீடுகள் தோறும் கலையின் விளக்கம் என்று கவிஞன் பாரதி கூறியது போல் கலைகள் இல்லங்கள் தோறும் எழுந்தருளி இருள் நீக்கி ஒளிபரவ வேண்டும். நமது நாட்டிலே நம்மிடையே கலைப் பெருக்கத்திற்குக் குறைவில்லை. பெருக்கமிருக்கிறதே தவிர பெருக்கத்தையொட்டிய பலனைக்காணோம். நமக்குள் ஒரு நல்ல மனப்பான்மையுண்டு – அது எதையும் பாராட்டுதல். வீணை வித்துவானை – நடிப்புச் செல்வனை – பாடலாசிரியனை – இசை விற்பன்னனைப் பாராட்டி மகிழ்வதில் நமக்கு ஒரு தனிவிருப்பு. பாராட்டி மகிழ்வதோடு பயன்களையும் விளைவிக்க வேண்டும். கலைகள் வெறும் பாராட்டுக்களோடு நின்றால் வாழ்வுக்குப் பயன்படாத வீண்பொழுதுபோக்காய் முடியும். நம்மிடையே சந்தேகமும் கள்ளத்தனமும் இப்போது உருவாகியிருக்கின்றன. பொருள் உள்ளவனிடத்திலே இல்லாதவன் களவாய்க் கவர்ந்து செல்ல நினைக்கிறான். பொருள் உள்ளவன் நல்லவனைக் கூடச் சந்தேகித்து தற்காப்புத் தேடிப் பொருட்காப்புச் செய்கின்றான். முன்பெல்லாம் பனி, மழை, வெய்யில் போன்றவற்றிற்கும் விலங்குகள் போன்றவற்றிற்கும் தப்பிக் கொள்ளவே தற்காப்புத் தேடி வீடுகளைக் கட்டினார்கள். இன்று பக்கத்து வீட்டானைப் பகைவனாக்கி அவனை நம்பாமல் திருடனாக்கி அயோக்கியனாக்கி அவனிடம் இருந்து நம்மை நாம் காப்பாற்றவே வீடுகளை எழுப்புகிறோம். களவுகாவல் என்ற தத்துவ அடிப்படையில் வீடுகளைக் கட்டுகிறோம்.


இந்த நிலை மாறவேண்டும். மாற்றத்தைக் கலைகள் போதிக்க வேண்டும். மனித வாழ்வின் எல்லாத்துறைகளுக்கும் வேண்டிய நல்லுணர்வுகளைக் கலைகள் காட்ட

கு–XIII.33.