பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

69



குடியாட்சி என்பது மக்களால் ஆளப்படுவது. அதற்கு ஏற்ப, மக்களே ஆட்சித்திறன் உடையவர்களாக ஆகக் கூட்டுறவைவிடச் சிறந்த சாதனம் இல்லை. இந்தக் கூட்டுறவில் அரசு நேரிடையாகவோ மறைமுகமாகவோ தலையிடுதல் அறவே தவிர்க்கப்படுதல் வேண்டும். கூட்டுறவு இயக்கத்தில் அரசியல் கட்சிகள் கட்சி உணர்வுகள் புகுந்து விட அனுமதித்தல் தற்கொலைக்குச் சமம். கூட்டுறவாளர்கள் அரசியல் வாதிகளாக இருக்கலாம். தவறில்லை, ஆனால் அரசியலுக்குக் கூட்டுறவைப் பயன்படுத்தக்கூடாது. அரசியல்வாதிகள் கூட்டுறவாளர்களாக இருக்கலாம்; இருக்க வேண்டும். ஆனால் கூட்டுறவைப் பொதுமையானதாகப் பாதுகாக்கவேண்டும்.

உலக இயக்கத்தின் உயிர்ப்பு உழைப்பில்தான் இருக் கிறது. கூட்டுறவாளர்கள் உழைப்பாளர்களாக, உருமாற்றம் பெறவேண்டும். உழைக்காமல் உண்ணுவது காலப் போக்கில் மனிதனையும் கெடுத்து பொருள்களையும் அழித்துவிடும். உழைத்து உண்பதைக் கட்டாயமாக்கவேண்டும். எப்படியாவது பணம் வருவது என்ற வாழ்க்கை நாட்டுக்கு உகந்ததன்று.

இந்தக் கூட்டுறவு வாரத்தின்போது சபதம் ஏற்போமாக! உண்மையான கூட்டுறவுத் தத்துவத்தின் வழியில் கூட்டுறவாளர்களாக வாழ்வோம்! உழைப்போம்! உண்போம்! கதிரவன் ஒளியைப் பிரதிபலிக்கும் நமது கூட்டுறவுக் கொடியைப் போல, மக்கள் நலனைப் பிரதிபலிப்போமாக! பேச்சிலும் செயலிலும் கையோடு கை சேர்ப்பதால் கட்டு உழைப்பு! உற்பத்திப் பெருக்கம்! இதுவே கூட்டுறவு! இந் நிலையை நமது வாழ்க்கையாக-உழைப்பாக மாற்றுவோமாக!

‘மக்கள் சிந்தனை’ 15-11-81

கு.XIII.6.