பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

71



கோயில்கள் கூட்டுறவு இயக்கங்கள், பஞ்சாயத்து மன்றங்களிற் பங்கேற்பவர்கள் அழுக்காறு, விருப்பு, வெறுப்புணர்வுகள் இல்லாதவர்களாக இருக்கவேண்டும். இவற்றிற்கெல்லாம் மேலாக மனச்செழுமையுடையவர்களாக இருத்தல் வேண்டும். இங்கு வாழ்கின்றவர்கள் எல்லாரும் வாழும் உரிமை பெற்றவர்கள். இந்தியாவின் குடிமகன் ஒவ்வொருவனுக்கும் வாழ்வுரிமை அளிப்பதே கூட்டுறவு இயக்கத்தின் இலட்சியம். கூட்டுறவு இயக்கத்தின் மூலம் காந்தீய தத்துவங்களை வளர்த்து நாம் பயன்பெற முடியும்.

வரியால் விலைவாசிகள் உயர்ந்து விட்டன என்கிறார்கள். இன்று பொதுவாக, உற்பத்தியாளர்கள். எண்ணிக்கையை விட வியாபாரிகளின் எண்ணிக்கையே உயர்ந்திருக்கிறது. சரக்குகள் பல கைம்மாறுவதால் நிர்வாகச் செலவு பல மடங்கு பெருகுகிறது. உற்பத்தியாளர்கள், வாங்குபவர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் இந்த விலைவாசி உயர்வை ஓரளவு தவிர்க்கமுடியும்.

கூட்டுறவு இயக்கத்தில் நுழைகிறவர்கள் ஒவ்வொரு வரும் நான் இந்தக் கூட்டுறவுக் குடும்பத்தின் ஓர் அங்கத்தினன் என்ற துய்மையான எண்ணத்தோடு நுழைய வேண்டும். உற்பத்தியாளர் நான் உற்பத்தி செய்கின்ற பொருள்களைக் கூட்டுறவுச் சங்கத்திற்குத்தான் விற்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தங்கட்குத் தேவையானவற்றைக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவே வாங்கவும் உறுதி கொள்ளவேண்டும். கூட்டுறவு இயக்க அங்கத்தினரிடையே சேமிப்பு உணர்ச்சி பெருக வேண்டும்.

விலை உயர்கின்ற பொருள்களைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் வாங்கவும் விற்கவும் முடியும். இவ்வளவு வசதிகளும், வாய்ப்புக்களும் இருந்தும் நாம் பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கின்றோம்.

கூட்டுறவாளர்கள் தங்கட்குள் மனம் விட்டுப் பேசிப் பழக வேண்டும். அவர்கள் தங்கட்குள் சந்தேக உணர்வுகளுக்கு இடங்கொடுக்கக்கூடாது.