பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

243


77. தைரியம்!

காய்ச்சிய இரும்பு எஃகாதல் உண்மை!
எஃகு அதனில் வலிமையுடையதில்!
உன் இதயமும் உறுதி வாய்ந்ததாக
இருக்க வேண்டுமா?
பயமில்லாத மனச்சாட்சியைப் பெற முயலுக!
அச்சமில்லாத அகநிலை வாழ்விற்குத்
தைரியம் தந்து வாழ வைக்கிறது!
வாழ்க்கைப் போராட்டத்தில்
தைரியத்துடன் போராட
விழிப்புள்ள காப்புணர்வு தேவை!
தன்னைத் தானே விமர்சித்து வாழ்பவர்
அயலவர் கண்டனத்துக்கு ஆளாவதில்லை.
பேராண்மையுடன் கூடிய மனச்சாட்சியுடையவர்கள்
ஓடி ஒளிய வேண்டியதும் இல்லை!
ஒளிக்க வேண்டியதும் இல்லை!
ஆனால், அவன் அனைவர் மாட்டும்
ஒருகண் வைத்திருப்பான்!
உறுதியும் தைரியமும் உடையவர்கள்
பயமற்ற வாழ்க்கை நடத்தலாம்!
அவர்கள் மனச்சாட்சி திசையில் வாழ்பவர்கள்!
உன் தரப்பில் உறுதியாக இரு!
நீ செய்வதைச் சலனமின்றிச் செய்க!
மற்றவர்களை நடத்திய பாங்கில்
தவறில்லை என்ற திடமுடன் இரு!
அப்போது தைரியம் கிடைக்கும்!
நீ, நிற்பாய்!
எந்தச் சூழ்நிலையிலும் நிற்பாய்!