பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


83. ஆத்ம சோதனை!

நாளும் பல நற்செயல்களை
நல்லவை பெருகி வளரச் செய்க!
இந்த உலகம் பலவற்றாலும் ஆனது!
ஆனாலும், இந்த உலகில் பலர் உள்ளனர்
தீமைகள் செய்ய!
நீ இன்றியே தீமைகள் செய்வர்!
இருள் உண்டாக்க எண்ணற்றவர்கள்!
அவர்களுக்குள் நீ நாளும் நன்மைசெய்க!
நீ ஏன் தனித்து விளங்கக் கூடாது?
ஒளிமிக்க புகழுடன் விளங்கக் கூடாது?
நாளும் நற்செயல் செய்திடின்
சிந்தனையும் செயலும் குணமும் சிறக்கும்!
இந்தப் பேருலகில்
நன்மைக்கும் தீமைக்கும் இடையே
ஓயாது போர் நடந்து வருகிறது!
தீய வரிசையை நினைத்தல் ஆகாது!
நன்மையும் தீமையும்
இந்த உலகத்திற்குத் தந்திடும்
வடிவத்தினைப் பார்!
உலகம் உருப்படியாவது, எதனால்?
சிந்தனை செய்க!
உன் வழியைத் தேர்வு செய்க!
அவ்வழித் தடத்தில்
தொடர்ந்து செல்க! செய்க!
இரவு படுக்கப் போகும் முன்
ஆத்ம பரிசோதனை செய்து கொள்!
“நான் நன்றே செய்துள்ளேன்”
என்ற முடிவுக்கு வந்தால்
வாழ்கின்றாய்! வையகத்தை வாழ்விக்கின்றாய்!