பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



132. உண்மை சாகாது!

இன்று தாட்சண்யம் காட்டினால்
நாளை வருந்த நேரிடும்!
ஆதலால், உன்னை உண்மைக்கு ஒப்படைப்புச் செய்!
பொய், இன்றைய நாளை வேண்டுமானால்
எடுத்துக் கொள்ளட்டும்!
ஆனால், நாளைய நாளும் பொய்க்கு ஆகக் கூடாது!
உண்மை மட்டுமே நாள்களை எடுத்துக் கொள்ளட்டும்!
உலகம் உண்மையை விட்டு விலகலாம்!
ஆயினும்,
உலகச் சுழற்சியில்
அடுத்த சுற்று வரும் பொழுது
உண்மை மட்டுமே நிலைத்து நிற்கும்!
உண்மை மட்டும் உரிமை ஏற்கும்!
உண்மை அழியாதது;
உண்மைக்குத் தீராத் தொல்லைகள் தந்தாலும் அழியாது
உண்மைக்கு உதைகொடு!
உண்மையை அறுத்துப்பார்
ஏன்? உண்மையைச் சுட்டேபார்!
மின்சார நாற்காலியில் உண்மையை வைத்தாலும்
உண்மை சாகமறுக்கும்; உண்மை சாகாது!
உண்மை அழியாதது; என்றும் அழியாதது!