பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



136. அரிய பண்புகள்!

தந்தையே! கடவுளே! கருணை செய்க!
இன்று வாழ்தலுக்குரிய தைரியத்தைத் தந்தருள்க!
என்னுடைய துன்பங்கள் முன்னால்
நான் கோழையாகி விடாமல்
நிற்க அருள்செய்க!
நான் என் கடமைகளை செய்தலுக்கு
உரிய தகுதி யுடையவன் என்பதை
உறுதிப் படுத்தும் தைரியத்தினை அருள்செய்க!
எது வந்தால் என்ன? வருவன வரட்டும்!
நான் மனிதக் கூட்டத்தின் காலடியில்
ஊர்ந்து செல்லும் புழு அல்ல!
நான் மனிதக் கூட்டத்தின் நடுவில்
உயர்ந்து நிற்பவன்! விளங்கித் தோன்றுபவன்!
நான் தோல்வியின்முன் தலைகுனிவதில்லை!
அப்படியே தோல்வி வந்தாலும் சரி,
பின்னடைவு வந்தாலும் சரி,
எனக்கு இந்தப் பின்னடைவு ஒர் அனுபவமே!
அடுத்த ஓட்டத்திற்குரிய முன் அறிவிப்பேயாம்!
பயம், நம்பிக்கையின் எதிரி!
பயம், ஆர்வங்களின் பகைவன்!
நான் நம்புகின்றேன்; நம்பினோர் கெடுவதில்லை!
கடவுளே! கண்களைத் திறந்துவிடு!
பயமின்றி நடக்க அருள் செய்க!
துணிவொடு கலந்த தைரியமே
வாழ்க்கையின் ஒளி!
உயர்நிலைப் பொருள்!
துணிவு, தைரியம் அழியா உடைமைகள்!
ஆக்கம் அளிக்கும் அரியபண்புகள்!
தைரியம் கொள்! முன்னே நட! முன்னே நட!