பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

343



167. சிந்தனை

உலகம் விரைந்து நகர்கிறது!
விரைவு மிகுதியும் உள்ள இந்த உலகத்தில்
விரைவோடு விரைவாக ஓடாமல்
சில நிமிடங்கள் ஒதுங்கி நின்று
சிந்தனை செய்க!
அதன்பின் நீயும் நட!
நின்ற காலத்தையும் தூரத்தையும் கூட
நீ கடந்து செல்லலாம்!
உன்னை யாரும் முந்திவிட மாட்டார்கள்!
கவலற்க!
எங்கேயும் தொடர்ச்சியான பயணம் இல்லை!
தேக்கத்தையும் தோல்விகளையும் தவிர்க்கச்
சிந்தனை செய்!
நீ சிந்தனை செய்யும் முறையில் பயணம் செய்!
சிந்தனை குறுக்கு வழிகளைக் கடக்க உதவும்
சிந்திப்பவன் பின் தங்கி விடுவதில்லை
இன்று நீ இருக்கும் இடம்
நேற்றைய சிந்தனை எங்கிருந்ததோ அந்த இடம்
இன்று நீ என்ன எண்ணுகிறாயோ,
அந்த இடத்தில் நாளை இருப்பாய்!
சிந்திப்பதற்கு அதிக நேரம் ஒதுக்கு!
நீ, அவ்வழி அதிக நேரமும் பெறுவாய்
சிந்தனையின் சுவட்டிலேயே
வாழ்க்கைப் பயணச்சுவடுகள் அமைவதாகுக!