பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

371


194. இந்த நாளும் எந்த நாளும்!


இந்தப் புத்தாண்டில் 1993-ல் என்னுடைய பிரார்த்தனை!
ஒவ்வொரு நாளையும் என்னுடைய நாளாக்குவேன்!
ஒருநாளும் பழுதாக விடேன்!
முன்னே பார்ப்பேன்! பின்னே பார்த்தல் இல்லை!
இறைவனே, சமாதானத்தை அருளிச் செய்க!
இறைவனே, மன அமைதியைக் கொடு
இறைவா சண்டைகளிலிருந்து காப்பாற்று!
இறைவா, வேண்டாம் மனக் கசப்புகளும் ஆத்திரமும்
இறைவா, எல்லாரும் நன்றாக இருக்க அருள் செய்வாய்!
இறைவா, என்னை விரும்பாதவனிடத்திலும் நான்
அன்பாக இருக்கும்
இதயத்தினைத் தந்தருள் செய்க!
இறைவா என் தவறுகளைச் சடுதியில் அறிந்துணர
அருள்செய்க!
இறைவா, விரைந்து திருத்தமுற அருள்செய்க!
இறைவா, என்னைப் பெருந்தன்மைப் பண்புகளால்
விளங்கச் செய்க.
இறைவா, அன்பு செய்தலும் உதவி செய்தலும்
என்றன் இயல்பாக அமைய அருள் செய்க
இறைவா, தீமை வெறுத்திடும் பண்பினை வழங்குக!
இறைவா மனிதனாக வாழ்ந்திட வலிமையைத் தா!
இறைவா, வாழ்க்கையின் விலையை மதிப்புடையதாகக்
கற்றுத்தா!
இறைவா, வாழ்க்கையின் வாடகையைக் குடிக் கூலியாக
வழங்க அருள்செய்க!
இறைவா, உன்னுடன் சேர்ந்து சிந்திக்கிறேன்
இறைவா, உன்னுடன் நடக்கிறேன்
இறைவா, கடைசிவரையில் உன்னுடன் நடப்பேன்!