60
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தானைத் தலைவன் ஆண்ட தலைமுறை!
அண்ணா அமர ரானபின் ஆட்சிப்
பொறுப்பினை ஏற்றுப் பொலிந்திடு கின்றவர்
பெருகிய அன்பு பேணும் நெறியினை
உடைமையாய்க் கொண்டவர் உலகம் புகழும்
கலைஞர் கவினுறத் தமிழக அரசினை
நடாத்து கின்ற இந்தநூற் றாண்டைப்
பெரியார் நூற்றாண் டெனில்அது பிழையிலை!
வாழிய பெரியார்! வளர்கஇத் தலைமுறை!
தன்னிக ரில்லாத் தனிப்புகழ் பெற்றே
தமிழினம் ஓங்கித் தழைத்துவா ழியவே!
கவியரங்கத் தலைவர் அமைச்சர்
மாண்புமிகு முத்துசாமி அவர்கள்
பண்டைத் தமிழ்நா டாண்ட அரசர்
பைந்தமிழ்ப் புலவராய் இருந்தனர். பாவலர்
தம்மொடுங் கூடித் தனிமகிழ் வெய்தினர்!
கவியும் யாத்தனர்! புவியும் காத்தனர்!
இடையில் இழந்தது இந்நா டந்தப்
பெருமையை பிறப்பால் மட்டுமல் லாது
நெஞ்சத் தாலும் நிமிர்ந்தெழு தமிழராய்
அரசுஏற் றிருக்கும் ஒருதலை முறையைப்
பெற்று மகிழும் பேற்றினை யடைந்தோம்!
உள்துறை யாட்சி அமைச்சர் ஒளிப்புகழ்
நல்திற முத்து சாமி நாளெல்லாம்
பட்டிமண் டபத்தில் பாங்கறிந் தேறுவார்
கவியரங் கத்தினில் கவிதை மலர்களால்
அன்னை தமிழினை அருச்சிக் கின்றனர்.
அவர்கவி யரங்கத் தலைவரா யமர்ந்தது
பொருத்தம் அவர்தமிழ் போலவா ழியவே!