பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1

செய்து திறம்பட விளக்கியுள்ளனர். மதிப்புரைகளே ஒரு தனி நூல் அளவுக்கு வளர்ந்துள்ளது.

தவத்திரு ஊரன் அடிகள் தாம் அரிதின் முயன்று உருவாக்கிய 'சைவத் திருமடங்கள் 18' என்னும் பெருநூலில் மணிவாசகர் பதிப்பகத்தின் தொகுப்பு மிகப்பெரிய பணி என்றும் அடிகளாருக்கு நிலைத்த நினைவுச் சின்னம் என்றும் நெஞ்சாரப் பாராட்டியுள்ளார். இத்தொகுதிகளின் பன்முக நலன்களைப் பாரித்துரைத்துள்ளார். திருமடத்தின் வரலாறு எழுதும்போது இப்பெருந்திட்டத்தின் பெரும்பயனை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத் தக்கது. அடிகளார் நூலுக்கு இவர் அளித்துள்ள அணிந்துரையில் ஐவகை அமைப்புகளின் கலவை (Synthesis) அடிகளார் என்பதனை ஆராய்ந்து நிறுவி, அவரது பேரறிவையும் பேராற்றலையும் பெருஞ் செயல்களையும் விளக்கியுள்ளார்.

சங்ககாலத்தில் தனிப் பாடல்கள் தொகைபெற்றது போல இருபதாம் நூற்றாண்டு தொகைநூற் காலம் எனத் திறனாய்வாளர் மதிப்பீடு செய்துள்ளனர். எழுத்தாளரின் கதைகள், அறிஞரின் கட்டுரைகள், ஆய்வுகள், படைப்புகள் ஒரு குடைக்கீழ் தொகைப் படுத்தும் முயற்சி இந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடிகளாரின் நூற்றொகை 20ஆம் நூற்றாண்டுத் தொகைநூல் வரலாற்றில் வரலாறு படைத்து விட்டது. 6000 பக்கங்களையும் ஒருசேரத் தொகுத்துப் பார்க்கும்போது பிரமிப்பு உண்டாகிறது. நாளும் சொற்பொழிவு, திருமடத்துப் பணிகள், பல்வேறு அமைப்புகளை உருவாக்குதல், பன்னாட்டுப் பயணம், பன்னாட்டு உறவு, பல்வேறு செயற்பாடுகள் இவற்றுக்கிடையே குன்றக்குடி அடிகளார் செய்த நூற்பணி மலைப்பைத் தருகிறது. கட்டுரைகள் பொழுதுபோக்குக் கட்டுரைகள் அல்ல. புதிய தமிழகம் தோன்ற, தமிழர்கள் விழிப்புணர்ச்சி பெற வழிவகுக்கும் படைக்கலன்கள். தமிழ் மறுமலர்ச்சி, சமய மறுமலர்ச்சி, சைவ சமய எழுச்சி, திருமுறை இயக்கம், திருக்குறள் இயக்கம், தமிழ் வழிபாடு முதலியவற்றுக்கு அடிகளார் அளித்த கருத்துக் கொடைகள் இத்தொகுதிகளில் பதிவு செய்யப் பெற்றுள்ளன.

குன்றக்குடி அடிகளாரிடம் மறைமலையடிகளின் சைவநூற் புலமையும் திரு.வி.க.வின் சமயப் பொதுமையும் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் தமிழ்ப்பற்றும் ஒருங்கிணைந்திருப்பதைத் திறனாய்வாளர்கள் இனங்கண்டு அடையாளங் காட்டியுள்ளனர்.