பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

கி.பி.2ஆம் நூற்றாண்டில் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் என்றொரு மணியாரம் படைத்துச் செந்தமிழுக்குச் செழுமை சேர்த்தார் என்பர்.20ஆம் நூற்றாண்டில் ஈடு இணையற்ற எழுத்துப் பணியால், கருத்துப் புரட்சியால் குன்றக்குடி அடிகளார் குன்றாப் புகழ்பெற்றுக் குன்றேறி நிற்கிறார்.

மேடைத் தமிழுக்கு அடிகளார்மேன்மை சேர்த்தார். மனித குலத்தை மேம்படுத்தும் எண்ணங்களை வாரி வழங்கினார். செந்தமிழ்ப் பொழிவுகளால் தமிழரின் சிந்தை மகிழச் செய்தார். அடிகளின் பாணி தனிப்பாணி. அடிகளார் வழியில் பட்டி மண்டபங்கள் இன்று வெற்றி நடைபோடுகின்றன. அடிகளாரின் பேச்சே எழுத்து வடிவமாக இருக்கும். எழுத்தில் மேடைப் பேச்சின் செல்வாக்கு மிகுந்திருக்கும். இதனை இந்நூல்வரிசை கற்பார் எளிதில் உணர்வர்.

நாவுக்கரசரின் தொண்டு நெறியும் மாணிக்கவாசகரின் அருள்நெறி ஈடுபாடும் சேக்கிழார் வழியில் தொண்டர் சீர்பரவும் இயல்பும் அடிகளார் வாழ்வில் இயல்பாக அமைந்தவை.

அடிகளாரின் திருக்குறள் ஈடுபாடும் திருக்குறள் கல்வியும், திருக்குறள் தேர்ச்சியும் சமூகப் பார்வையும் முதல் நான்கு தொகுதிகளில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. இவர்தரும் புதிய வெளிச்சங்கள் பல.

அடிகளின் நூலினை ஒரு சேரத் தொகுத்து நோக்கிடும்போது முனைவர் பட்டங்களுக்கு ஆய்வு செய்வதற்குக் களங்கள் - சிந்தனைக் களங்கள் பல உள என்பதை உணர்கிறோம். அடிகளாரின் எழுத்தும் பேச்சும் இளைஞர்களை ஈர்த்தன. புதியதோர் உலகம் செய்ய வழிவகை செய்தன. நீடுதுயில் நீங்க - சமய உலகம் விழிப்புணர்வு கொள்ள அடிகளார் ஆற்றிய பணிகள் தனித்ததோர் பேராய்வுக்கு உரியன.

அவர் பேச்சுக்கள், எழுத்துக்கள், கவிதைகள் அனைத்தையும் தொகுத்து வழங்குகிற பெரும்பேறு, தனிப்பேறு மணிவாசகர் பதிப்பகம் பெற்றபேறு.

கார்ல் மார்க்ஸை எடுத்துரைக்கும் காவி உடையினர். மதக் கலவரங்களை முன்னின்று தீர்க்கும் முன்னோடி, தமிழ்நாட்டுத் திருமடங்களுக்கு ஒட்டுமொத்தப் பெருமை சேர்த்த உயர்