பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"நாம் நீறணிவது நம்வினை போக, இறைவன் நீறணிவது தம்மைத்தொழுகின்ற அடியார்களின் வினை நீறாக" என்கின்றார். முழுவடிவாகப் பார்த்தால், திருவெம்பாவை வீட்டுப்பாட்டு இந்த வீடுகளில் நாம் அந்தப் பாடல்களைப் பாடினால் அந்த வீட்டின்பம் இங்கேயே கிடைக்கும். வீடு செழிக்கும்.நாடு செழிக்கும். அடுத்த ஆண்டில் ஆற்றங்கரைகளில் பாவை நோன்பு நோற்கும் முறை வரவேண்டும். இப்படிச் செய்தால் நாடுதழுவிய குடும்பங்களுக்கும் குடும்பங்கள் தழுவிய நாடும் தோன்றும்.

திருப்பாவை, திருவெம்பாவையைவிட மொழிநடையில் எளிமையானது, ஆனாலும் தத்துவச் செறிவிற்கும் பொருள் வளத்திற்கும் குறைவில்லை. எம்பாவையை விடத் திருப்பாவையில் பெண்மையை மிகுதியாகப் பாக்கிறோம்.

வில்லிபுத்துர் மண்ணும், மண்ணின்றெழும்பும் துர்சியும், தூசியைக் கொணரும் காற்றும் நல்லின்பம் தரும் என்பது ஆன்றோர் வழக்கு. திருப்பாவைக்கு எழுதிய உரையினை ஈடு என்று அழைக்கின்றனர். ஈடும் ஓர் இணையற்ற இலக்கியமாக விளங்குகிறது. வைணவம் சம்பிரதாயத்தையும் மரபையும் காப்பாற்றி வந்துள்ளது. வேதங்களையும் ஒத்துக் கொண்டுள்ளது. ஆனாலும், வைணவர்கள் திவ்வியப் பிரபந்தத்தை வேதங்களைக் காட்டிலும் முக்கியமானதாகக் கருதுகிறார்கள். நாமே வேதங்கள் முதன்மையானவை என்கிறோம். ஆனாலும், திருமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறோம்.

வாழ்க்கை நெறியைக் காப்பாற்ற உதவுவன திரு வெம்பாவையும் திருப்பாவையும்.

திருவெம்பாவையால் நாடு செழிக்க மழைமொழியும். மழைபொழிந்தால் நெல் விளையும், சோறு கிடைக்கும் திருப்பாவையால் பால்வளம் பெருகும். இரண்டையும் படித்தால் பாற்சோறு கிடைக்கும்.