பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

187



"அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்”

என்பது திருக்குறள். ஆண்டவன் அடியாரைக் கருதிக் கொள்வது அருளாகும். அடியார் அவ்வருளைப் பெறக் கொள்வது அன்பாகும். இதனைத்தான் அடிகள் பல இடங்களில் விதந்து கூறியுள்ளார். இக்கருத்தை,

"உன்றன் வார்கழற்கு அன்பு எனக்கு
நிரந்தரமாய் அருளாய் நின்னைஏத்த முழுவதுமே”

என்று வேண்டுகிறார். இஃதன்றி வேறு எவ்வகை இன்பத்தையும் விரும்பவில்லை.

"கொள்ளேன் புரந்தரன்
மால்அயன் வாழ்வு குடிகெடினும்”

என்றும்,

"வானேயும் பெறில் வேண்டேன்”

என்றும்,

"வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம்
வேண்டேன் மண்ணும்விண்ணும்"

என்றும் கூறுகின்றார். மேலும், திருவருளால் நரகம் புக நேரினும் வருந்தேன்’ என்றும் கூறுகிறார்.

"நரகம் புகினும் எள்ளேன் திருவருளாலே
இருக்கப்பெறின்”

என்று கூறுகின்றார்.

அறிஞர்களால் உண்டு என்று பேசப்படுகின்ற கடவுள் மறுபிறப்பு, இருவினை முதலியன, இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள் வள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறார்கள் அவர்களை வள்ளுவர் 'பேய்' என்று கூறுகின்றார்.