பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பெரும்பாலோர் கடமையைச் செய்யமாட்டார்கள். செய்யவேண்டியவற்றைச் செய்யமாட்டார்கள். கடமையைச் செய்யாமலே உரிமையைப் பெற முயல்வார்கள். கடமை என்பதொன்று உண்டு என்பதையே மறந்துவிடுவார்கள். அத்தகையாருள் ஒருவர்தான், 'நான் அறிவேன்' என்றார். 'பெறவேண்டியவற்றின் பாக்கியை நான் அறிவேன்' என்று கூறுகின்றார். அவரது ஆசை தீராத ஆசையாக இருக்கிறது.

அன்பரின் ஆசை வெறுக்கத் தக்கது அல்ல, தீயது அல்ல; போற்றத் தக்கது; புகழத் தக்கது. அன்பரின் இன்னும் வேண்டும் என்ற ஆசை பொன்னைப் பற்றியது அல்ல; பொருளைப் பற்றியது அல்ல. பேராவியற்கையைப் பற்றியது. இன்பத்துள் இன்பத்தைப் பற்றியது. அறவாழி அந்தணன் தாள் சேர்தலைப் பற்றியது. அன்பரின் விருப்பம் சற்றே நிறை வேறியது. ஆண்டவனைக் கண்டார். கண்குளிரக் கண்டார். மாலமுதப் பெருங்கடலை மண்ணிலே கண்டார். பிறப்பிறப்பை நீக்கும் பெரு மருந்தைக் கண்டார். துன்பம் துடைக்கும் தூய சோதியைக் கண்டார். நெஞ்சத்தைக் கோயிலாகக் கொண்ட நிமலனைக் கண்டார். அகம் நெகக் கண்டார்; அன்புருகக் கண்டார். இன்பப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்தார். ஆனால் எல்லாம் சிறிது காலம். கண்ணால் கண்ட திரு உரு மறைந்தது. கண்ணால் கண்ட இறைவன் மறைந்தான். அன்பரைத் தனியே விட்டுச் சென்றான். இன்பத்தின் அனுபவம் இடையறவுப்பட்டது. பிரிவினால் வருந்துகின்றார் அன்பர்; புலம்புகின்றார். பிரிவுத் துன்பம் கொடியதுன்பம் அல்லவா? இனியார்ப் பிரிவு இன்னாது என்பது பொய்யா மொழியல்லவா? பிரிவாற்றாமையால் திண்வரை உருளவும், தீயில் வீழ்கவும் செழுங்கடல் புகவும் எண்ணுகின்றார்.

"உன்றன் வார்கழற்கு அன்பெனக்கு
நிரந்தரமாய் அருளாய்”

என்று இரந்து வேண்டுகின்றார்.