பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

199



சேக்கிழார் செந்நெறி மணக்கும் மலர் மலர்க! சேக்கிழார் செந்நெறியை எண்ணியும், சொல்லியும், கேட்டும், துணை நின்றும், தொண்டு செய்வோர் அனைவரும் வாழ்க! வளர்க!

11. கச்சியப்பர்

பன்னீராயிரம் பாடல்களைக் கொண்ட மிகப் பெரிய நூல் கச்சியப்ப சிவாசாரியார் அவர்களின் கந்தபுராணம். 'கந்தபுராணத்திற்கு எந்தப் புராணமும் ஈடில்லை' என்பது வழக்கு வாழ்வியலின் பல நுட்பங்களைக் கொண்ட, ஒரு பெருநூல் அது. திருவள்ளுவர், கம்பர், திருமுறை பாடிய நாயன்மார்கள் ஆகியோரின் வாக்கியங்கள் பலவற்றைக் கச்சியப்பர் அப்படி அப்படியே பல இடங்களில் எடுத்துக் கையாண்டிருக்கிறார். இவ்வகையில் அவர் முன்னோர் சொல்லைப் பொன்னே போல் போற்றும் ஒரு சிறந்த காவிய ஆசிரியராக விளங்குகிறார்.

வழிபாட்டிற்காக வழிபாட்டுத் துறையில் காவியம் செய்கின்றவர்கள், நேரடியாகத் தாமே இறைவனின் திருவருளை அனுபவித்து அந்த அனுபவ உண்மைகளைக் காவியம் ஆக்கும் போதே அந்தக் காவியம் தனிச் சிறப்படைகின்றது. நமது கச்சியப்ப சிவாசாரியார் அத்தகைய அனுபவ ஞானம் பெற்ற பெரியார், சிவலிங்கத் திரு மேனியைத் தொட்டுத் தழுவிப் பூசனை செய்து இறையருட் பேற்றை-இறையின்பத்தை அனுபவிக்கும் நல்ல வாய்ப்பு அவருக்கு இருந்தது. எனவே அவரது பாடல்கள் வழி பாட்டிற்கு உகந்தனவாக இருப்பதில் வியப்பில்லை.

கச்சியப்ப சிவாசாரியாரின் பன்னிராயிரம் பாடல்களில் திருமுருகன் வழிபாடுதான் அடிப்படைக் கருத்தாக-மையக் கருத்தாக அமைந்திருக்கிறது.