பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



திருத்தம், சீர்திருத்தம், புரட்சி என்ற சொற்கள் யாவும் பொருளால் மாறுபட்டனபோல் தோன்றும். ஆனால் காலத்திற்கேற்ப எழுந்த சொற்களேயன்றி கருத்தால் மாறுபாடு கற்பிக்கத்தக்கன அல்ல அவைகள். அதுபோலவே காவியம் காப்பியம் என்பனவெல்லாம் சமயச் சார்புடைய தொன்மை சான்ற வரலாறுகளுக்கு-இலக்கியங்களுக்குப் புராணம் என்று பெயர். இன்று புராணம் என்று சொல் சற்று கேவலமான பொருளில் பயன்படுத்தப் பெறுகிறது. எனினும், புராணம் என்ற பெயரை மறந்துவிட்டு நாம் கந்தபுராணத்திற்குள் நுழைந்தால் நல்ல சமுதாயச் செய்திகள் பலவற்றைப் பெறலாம்.

கடல்நீர் தண்ணீர்தான்-எனினும் அதை வாங்கி வையகத்திற்கு வழங்க வானம் இருப்பதுபோல தேங்கிக் கிடக்கின்ற இறையருளை வாங்கி நமக்கு வாரி வழங்க சிவாசாரியார்கள் இருக்கிறார்கள். அவ்வாறு இறையருளை வாங்கி வாரி வழங்குகின்றவர்கள் அதை ஏற்றுக் கொள் கின்றவர்களைப் பற்றிய-வாங்கிக் கொள்கின்றவர்களைப் பற்றிய திறமான அறிவு பெற்றிருக்க வேண்டும். அந்த அறிவு நமது கச்சியப்ப சிவாசாரியாரவர்கட்கு மிகுதியும் இருந்திருக்கிறது. அவருக்கு சமுதாயத்தைப் பற்றிய சிந்தனை எவ்வளவு இருந்திருக்கிறது என்பதற்கு அவரது கந்தபுராணம் தக்க சான்றாக விளங்குகிறது.

பிறப்பினால் கற்பிக்கப் பெறுகின்ற-நிலவுகின்ற சாதியுணர்வுகள் சமயநெறிக்கும் சமுதாய உணர்வுகளுக்கும் முரண்பட்டன என்ற கருத்து நீண்டநாள் வழக்கமாக இருந்து வருகின்றன. சமுதாய ஒழுங்கு மரபின் தலை மகனான நமது கச்சியப்ப சிவாசாரியார் தமது நூலில்,

"சிறிய ரென்றுஞ்
       சிலரைச் சிலர்மேல்
நெறிய ரென்றும்
       நினைவது நீர்மையோ?